/

எழும்பூரில் நாளை(ஏப். 3) அதிகாலை முதல் வழக்கமான புறநகர் ரயில் சேவை!

எழும்பூரில் நாளை(ஏப். 3) முதல் வழக்கமான அட்டவணையில் புறநகர் ரயில்கள் இயங்கும்.

News image

புறநகர் மின்சார ரயில்

கோப்புப்படம்

Updated On :2 ஏப்ரல் 2026, 12:14 pm

இணையதளச் செய்திப் பிரிவு

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேடை எண் 10,11-ல் நடைபெற்று வந்த மறுசீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், நாளை(ஏப். 3) முதல் வழக்கமான அட்டவணைப்படி ரயில்கள் இயக்கும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

எழும்பூர் ரயில் நிலையம் தென் மாவட்டங்களின் முனையமாக செயல்பட்டுவருகிறது. தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட விரைவு ரயில்கள் தென் மாவட்டங்களுக்கு இங்கிருந்தே சென்று வருகின்றன.

புறநகர் மின்சார ரயில்களும் தினமும் 200-க்கும் மேற்பட்ட முறை எழும்பூர் ரயில் நிலையத்தை கடந்து சென்று வருகின்றன. எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்புப் பணி கடந்த 2024- ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு ரூ. 820 கோடி மதிப்பீட்டில் நடைபெற்றுவருகிறது.

இதில், 1 முதல் 11- ஆம் தண்டவாளங்கள் வரை சீரமைக்கும் பணிகள் 2025- ஆம் ஆண்டு தொடங்கி நடைபெற்றுவருகின்றன. அதையடுத்து 10, 11-ஆவது தண்டவாள சீரமைப்புப் பணி கடந்த பிப்ரவரி இறுதியில் தொடங்கப்பட்டது. அவ்விரு தண்டவாளங்களில் புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்பட்டு வந்த நிலையில், இந்த சீரமைப்புப் பணி காரணமாக புறநகர் மின்சார ரயில்கள் தற்போது 5, 6 ஆகிய தண்டவாளங்களில் இயக்கப்பட்டுவருகின்றன.

தண்டவாள சீரமைப்பால் எழும்பூர் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில்கள் சிக்னலுக்காக வேகம் குறைக்கப்பட்டும், நிறுத்தியும் இயக்கப்படுகின்றன. அதனால் அவற்றின் 50 க்கும் மேற்பட்ட சேவைகள் குறைக்கப்பட்டுள்ளன. மின்சார ரயில் சேவை குறைப்பால் பயணிகள் சிரமமடைந்துள்ளனர்.

எழும்பூர் ரயில் நிலையத்தில் 10, 11- ஆவது தண்டவாளப் பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை முதல் ரயில்கள் அந்தத் தண்டவாளங்களில் இயக்கப்படும் என்றும் பழைய அட்டவணையே பின்பற்றப்படும் என்றும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.