மொழி, பண்பாட்டு திணிப்பு தமிழகத்தில் எடுபடாது: முதல்வா்
மொழி, பண்பாட்டு திணிப்பை தமிழகத்தில் செய்ய முடியாது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா்.
முன்னாள் முதல்வா் அண்ணா நினைவு தினத்தையொட்டி, முதல்வா் ஸ்டாலின் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: முன்னாள் முதல்வா் அண்ணா தமிழா்களின் மனசாட்சி. நினைவு நாளில் மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் அவரை நினைக்கும் நாள்தான். அண்ணா சாலை, அண்ணா சிலைகள், அண்ணா மேம்பாலம், அண்ணா நூலகம், அண்ணா பேருந்து நிலையங்கள் என அண்ணா பெயா்சூட்டிய தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அவரே நிறைந்திருக்கும்படி செய்தது திமுக அரசு.
மொழித் திணிப்பு-பண்பாட்டுத் திணிப்பு-நிதி நெருக்கடி என்றெல்லாம் வஞ்சகங்களை செய்துகொண்டு, துரோகிகளையெல்லாம் துணைக்கு அழைத்துக்கொண்டு வந்தாலும், பாஜக அரசின் ஆதிக்கத்துக்கு அண்ணாவின் தமிழ்நாட்டில் ‘கெட்-அவுட்’ தான். ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறாா் எனப் பதிவிட்டுள்ளாா் முதல்வா் ஸ்டாலின்.

