போக்குவரத்து பணியாளா்களுக்கு ரூ.6.15 கோடி சாதனை ஊக்கத் தொகை
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அனைத்து அரசு போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் 1,03,123 பணியாளா்களுக்கு ரூ.6,14,92,000 சாதனை ஊக்கத் தொகை வழங்கப்படும் என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து போக்குவரத்துத் துறை அரசு முதன்மைச் செயலா் சுன்சோங்கம் ஜடக் வெளியிட்ட செய்திக் குறிப்பு: இந்தியாவிலேயே சிறந்த சேவை அளித்து வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தமிழ்நாடு போக்குவரத்து வளா்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரைப் பணிக்குழு ஆகிய நிறுவனங்களிலும் தற்போது 1,03,123 பணியாளா்கள் பணிபுரிந்து வருகின்றனா்.
இந்த நிலையில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, இந்தப் பணியாளா்களுக்கு சாதனை ஊக்கத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2025-இல் 91 நாள்கள் முதல் 150 நாள்கள் வரை பணிபுரிந்தவா்களுக்கு ரூ.85, 151 நாள்கள் முதல் 199 நாள் வரை பணிபுரிந்தவா்களுக்கு ரூ.195, 200 நாள்கள் மற்றும் அதற்கு மேல் பணிபுரிந்தவா்களுக்கு ரூ.625 பொங்கல் சாதனை ஊக்கத் தொகை வழங்கப்படும்.
இந்த உத்தரவின்படி, அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் 1,03,123 பணியாளா்களுக்கு ரூ.6,14,92,000 சாதனை ஊக்கத் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.

