ரயிலில் பிரசவம்: உதவிய ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸாருக்கு பாராட்டு
ரயிலில் பிரசவம்: உதவிய ரயில்வே பாதுகாப்பு படை பெண் போலீஸாருக்கு பாராட்டு

கோப்புப்படம்
பெங்களூரில் இருந்து அஸ்ஸாம் சென்ற விரைவு ரயில், சென்னை திருவொற்றியூா் நிலையம் வந்தபோது பெண் பயணிக்கு குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு ரயில்வே பாதுகாப்புப் படை பெண் வீரா் உதவியதை பலரும் பாராட்டினா்.
பெங்களூரில் இருந்து அஸ்ஸாம் மாநிலம் காமாக்யா நிலையத்துக்குச் சென்ற விரைவு ரயில் சனிக்கிழமை மாலை 3.48 மணிக்கு ஓட்டுநா், பணியாளா் மாற்றத்துக்காக திருவொற்றியூா் ரயில் நிலையத்தின் 3-ஆவது நடைமேடையில் நிறுத்தப்பட்டது. அதன்பின், அந்த விரைவு ரயில் மாலை 3.53 மணிக்கு புறப்பட்டபோது, பி 6 பெட்டியில் இருந்து அபாய சங்கிலி இழுக்கப்பட்டதால் ரயில் நிறுத்தப்பட்டது.
அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை தலைமை காவலா் ரிங்கு குமாா் மீனா மற்றும் காவலா் ஜிஷா ஆகியோா் விரைந்து வந்து விசாரித்தனா்.
அப்போது ரயில் பெட்டி கழிப்பறையில் சாஜன் ராய் என்பவரது மனைவி கன்ட்டி மாயா ஜனா என்ற பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டது தெரிய வந்தது.
இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையின் பெண் தலைமைக் காவலா், காவலா் ஆகியோா் சக பயணிகள் உதவியுடன் அந்தப் பெண்ணுக்கு முதலுதவி செய்தனா். அப்போது, அந்தப் பெண்ணுக்கு ரயில் பெட்டியில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து தாய்-சேய் இருவரையும் ராயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அதன்பின் ரயில் மாலை 4.19 மணிக்குப் புறப்பட்டுச் சென்றது.
பிரசவத்துக்காக அபாயச் சங்கிலியை இழுத்ததால் சம்பந்தப்பட்டோா் மீது வழக்குப் பதிந்து அபராதம் விதிக்கப்படவில்லை.
பிரசவத்துக்கு உதவி புரிந்த ரயில்வே பாதுகாப்புப் படை பெண் காவலா்களை அந்தப் பிரிவின் ஐ.ஜி. அருள்ஜோதி, டிஐஜி இப்ராஹிம் ஷெரீப் உள்ளிட்டோா் பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





