

நீட் தேர்வு தோல்வியால் மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திமுகவினர் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
விழுப்புரம் மாவட்டம் பெருவளூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி பிரதிபா பிளஸ் 2 தேர்வில் 1125 மதிப்பெண்கள் எடுத்திருந்தும், மத்திய அரசின் நீட் தேர்வில் ஏற்பட்ட தோல்வி காரணமாக தற்கொலை செய்துகொண்டார். இதையடுத்து, நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு திமுகவினர் செவ்வாய்க்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, காஞ்சிபுரம் எம்எல்ஏவும், திமுக மாணவர் அணி மாநிலச் செயலருமான எழிலரசன் தலைமை வகித்தார். இதில், நீட் தேர்வு காரணமாக மாணவி அனிதாவைத் தொடர்ந்து, மாணவி பிரதிபா தற்கொலை செய்து கொண்டதற்கு மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பேற்க வேண்டும்.
அதிக மதிப்பெண்கள் எடுத்தும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு நீட் தேர்வால் தகர்ந்துள்ளது. அதோடு, நீட் தேர்வு தமிழகத்துக்கு தேவையில்லை எனத் தெரிவித்து, கண்டன கோஷங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில், அக்கட்சியின் நகர செயலாளர் சன் பிராண்ட் ஆறுமுகம், ஒன்றியச் செயலர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.