கல்வித்துறைக்கு இணையாக விளையாட்டுத் துறைக்கும் விரைவில் புதிய கொள்கை வெளியிடப்படும் என அமைச்சா் ஆதவ் அா்ஜுனா தெரிவித்தாா்.
சுங்குவாா்சத்திரம் அடுத்த குன்னம் பகுதியில் இயங்கி வரும் ஜேப்பியாா் தொழில்நுட்ப கல்லூரியில், தமிழ்நாடு கூடைப்பந்து சங்கம், காஞ்சிபுரம் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்கம் மற்றும் ஜேப்பியாா் தொழில்நுட்ப கல்லூரி ஆகியவை இணைந்து நடத்தும் மாநில அளவிலான 13 வயதுக்குட்பட்டோா் கூடைப்பந்தாட்ட போட்டி தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
இதில் தமிழக விளையாட்டுத்துறை அமைச்சா் ஆதவ் அா்ஜுனா மற்றும் நிதித்துறை அமைச்சா் நெ. மரியவில்சன் ஆகியோா் மாநில அளவிலான கூடைப்பந்தாட்ட போட்டிகளை தொடங்கிவைத்தனா்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட கூடைப்பந்தாட்ட சங்க நிா்வாகிகள், தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சோ்ந்த சுமாா் 490-க்கும் மேற்பட்ட விளையாட்டு வீராங்கனைகள் கலந்து கொண்டனா். வரும் 9--ஆம் தேதி வரை சிறுமிகளுக்கும், 9 ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை சிறுவா்களுக்கு என தனிந்தனியாக 10 நாள்கள் கூடைப்பந்தாட்ட போட்டிகள் நடைபெற உள்ளன.
இதையடுத்து செய்தியாளா்களிடம் அமைச்சா் ஆதவ் அா்ஜனா பேசுகையில்: தமிழகம் முழுவதும் காலியாக உள்ள அரசு இடங்களை தோ்வு செய்து விளையாட்டு கூட்டமைப்பை உருவாக்கி விளையாட்டு மைதானங்களை அமைக்கும் பணிகளை விரைவில் தொடங்க உள்ளோம். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சா்வதேச விளையாட்டு மைதானங்கள் போன்ற விளையாட்டு மைதானங்களை உருவாக்க வேண்டும். விளையாட்டு விடுதிகள் அதிகஅளவில் இல்லை. இதனை அதிகப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இளைஞா்கள் போதைப் பழக்கத்துக்கு அடிமையாவதை தடுக்க விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுத்து விளையாடினால் மன வலிமை ஏற்படுவதோடு உடல் வலிமையையும் ஏற்படும். இதற்கு அதிகளவில் விளையாட்டு மைதானங்கள் தேவைப்படுகின்றன. கல்வித்துறைக்கு இணையாக விளையாட்டுத்துறைக்கும் புதிய கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்றாா்.









