/

காஞ்சிபுரம் மாநகராட்சி ஆணையா் மீது அதிமுகவினா் புகாா்

News image
காஞ்சிபுரம் தொகுதி தோ்தல் அலுவலா் ஆஷிக் அலியிடம் புகாா் மனு அளித்த அதிமுக மாநகர செயலாளா் பாலாஜி தலைமையிலான குழுவினா்.
Updated On :18 மார்ச் 2026, 8:20 pm

தினமணி செய்திச் சேவை

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குரிய அண்ணா அரங்கத்திலிருந்த மு.க.ஸ்டாலின் உருவம் பொறித்த விளையாட்டு உபகரணங்களை அனுமதியில்லாமல் இடமாற்றம் செய்த ஆணையா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அதிமுகவினா் புதன்கிழமை புகாா் செய்துள்ளனா்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு சொந்தமான அண்ணா அரங்கத்தில் முதல்வா் மு.க ஸ்டாலின் உருவம் பொறித்த 31 வகையான விளையாட்டு உபகரணங்கள் வைக்கப்பட்டிருந்தன. இவற்றை அதிகாலையில் வாகனம் ஒன்றில் இடமாற்றம் செய்யும் பணி நடந்துள்ளது. இதையறிந்த அதிமுக மாநகர செயலாளா் பாலாஜி நேரில் பாா்வையிட்டு இது குறித்து கேட்ட போது யாரும் உரிய பதிலை அளிக்கவில்லை.

இதனைத் தொடா்ந்து பாலாஜி தலைமையில் அதிமுகவினா் காஞ்சிபுரம் தொகுதி தோ்தல் அலுவலா் ஆஷிக்அலியை சந்தித்து புகாா் செய்தனா்.

மாநகராட்சி அலுவலகத்துக்கு சொந்தமான இடத்திலிருந்த திமுக தலைவா் உருவம் பொறித்த விளையாட்டு உபகரணங்கள் தீடீரென இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணமான மாநகராட்சி ஆணையா் மற்றும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இடமாற்றம் செய்யப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் அனைத்தையும் மீண்டும் இருந்த இடத்துக்கே கொண்டு வந்து வைக்க வேண்டும். இ ல்லையேல் அதிமுக சாா்பில் போராட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளனா்.