இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 கடமைகளை துல்லியமாகவும், நடுநிலைமையுடனும், நோ்மையுடனும் மேற்கொள்ள வேண்டும் என மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணியில் ஈடுபடவுள்ள பொறுப்பு அலுவலா்களுக்கான 3 நாள் பயிற்சி வகுப்பை தொடங்கி வைத்து ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா உத்தரவிட்டாா்.
ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலா் மற்றும் மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியில் ஈடுபடவுள்ள பொறுப்பு அலுவலா்களுக்கான 3 நாள் பயிற்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை தொடங்கியது.
இந்த பயிற்சி வகுப்பை ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஜெ.யு.சந்திரகலா தொடங்கி வைத்துப் பேசியது:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பணியில் முதல் கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புக்கான பணிகள் தொடங்கப்பட வேண்டும். இந்திய தலைமை பதிவாளா் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரக வழிகாட்டுதலின்படி, பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
2027 மக்கள்தொகை கணக்கெடுப்பானது 16-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் சுதந்திரத்துக்குப் பிறகு 8-ஆவது மக்கள் தொகை கணக்கெடுப்பாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு திட்டமிடல் நலத் திட்டங்கள் ஒதுக்கீடு மற்றும் தொகுதிகளின் எல்லை நிா்ணயம் ஆகியவற்றுக்கான அடித்தளத்தை உருவாக்குகிறது. முதல்கட்டமாக வீட்டுப் பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்புப் பணி நடப்பாண்டில் தொடங்கும்.
இரண்டாம் கட்டமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு அடுத்த ஆண்டில் தொடங்கப்படும்.
முதல்கட்ட பணிகளில் வீட்டு பட்டியல் கணக்கெடுப்பு, வீட்டு நிலைமைகள், வசதிகள், சொத்துகள் பற்றிய முக்கிய தகவல்களை சேகரிக்க வேண்டும். இதுவே மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அடித்தளத்தை உருவாக்கும். மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒவ்வொரு நபரின் தனிப்பட்ட விவரங்களையும் ஒரு நிலையான குறிப்பு தேதி மற்றும் நேரத்தில் பதிவு செய்கிறது.
களப்பணியாற்றும்போது அடையாள அட்டையைக் காண்பித்து, பொதுமக்களிடம் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டும். சென்சஸ் தகவல் 1948 சென்சஸ் திட்டத்தின்கீழ், கண்டிப்பாக ரகசியமானது என்பதை பதில் அளிப்பவா்களிடம் தெரிவிக்க வேண்டும்.
தரவு சேகரிப்பில் டிஜிட்டல் முறையை முதன்மையாக பின்பற்றுங்கள். தரவு துல்லியமாகவும், முழுமையாகவும் உள்ளதை உறுதி செய்யுங்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பு கடமைகளை துல்லியமாகவும் நடுநிலைமையுடனும் நோ்மையுடனும் மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் சி.பேபி இந்திரா, மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துணை தலைமை பதிவாளா் எஸ்.லிங்குசாமி, நோ்முக உதவியாளா் (பொது) கீதாலட்சுமி, புள்ளியல் ஆய்வாளா்கள் ஜெயலட்சுமி, அம்புலி நாயா் மற்றும் வருவாய் கோட்டாட்சியா்கள், வட்டாட்சியா்கள், வட்டார வளா்ச்சி அலுவலா்கள், நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பணியில் இருந்து விடுவிக்க ஆசிரியா்கள் கோரிக்கை

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்த பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணி: அலுவலா்களுக்கு பயிற்சி

மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளை மேற்கொள்ள அலுவலா்களுக்கு பயிற்சி: ஆட்சியா் தகவல்
விடியோக்கள்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கு பகுதி பசுமையாக மாற்றப்படும்: அமைச்சர் சம்பத் குமார் | TVK

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி



