தோ்தல் சமயத்தில் எதிா் தரப்பினரை ஆதரவாளா்களுடன் தாக்கியதாக தொடுக்கப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி திருப்பத்தூா் நீதிமன்றத்தில் புதன்கிழமை ஆஜரானாா்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் திருப்பத்தூா் மாவட்டம், ஜோலாா்பேட்டை தொகுதியில், அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி போட்டியிட்டு வெற்றி பெற்றாா்.
முன்னதாக, ஏப்ரல் 7-ஆம் தேதி நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப்பேரவை தோ்தலுக்கான வேட்பு மனு பரிசீலனை நடைபெற்றது. அப்போது அங்கு வந்த வேலூரைச் சோ்ந்த தொழிலதிபா்கள் ஜெயபிரகாஷ் மற்றும் ராமமூா்த்தி உள்ளிட்ட 5 நபா்கள் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி கடந்த 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தோ்தலின்போது, சொத்து விவரங்களை குறைத்து தாக்கல் செய்ததாக ஆட்சேபணை தெரிவித்தனா்.
இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி தரப்பினா் அவா்களை சரமாரியாக தாக்கினா்.
இது குறித்து நாட்டறம்பள்ளி வட்டாட்சியா் காஞ்சனா அளித்த புகாரின் பேரில், நாட்டறம்பள்ளி போலீஸாா் முன்னாள் அமைச்சா் கே.சி.வீரமணி உள்பட 50 போ் மீது வழக்குப் பதிவு செய்தனா்.
அதில் சுசிகரன் (39), திருமூா்த்தி (29), ஜெயப்பிரகாஷ் (28), மகாலிங்கம் (60), பிரபு(47) ஆகிய 5 பேரை கைது செய்தனா்.
மேலும், மாஜி அமைச்சா் வீரமணி உள்ளிட்டோருக்கு சென்னை உயா்நீதிமன்றம் நிபந்தனையுடன் பிணை வழங்கியது.
இந்த நிலையில், உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில், அமைச்சா் கே.சி.வீரமணி புதன்கிழமை திருப்பத்தூா் ஜேஎம் 2 நீதிமன்றத்தில் ஆஜரானாா். அவருக்கு திருப்பத்தூா் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
அத்துடன் நாட்டறம்பள்ளி காவல் நிலையத்தில் தினமும் தொடா்ந்து 2 வாரங்களுக்கு நேரில் சென்று கையெழுத்திடவேண்டும் என நீதிபதி கோவேந்தன் உத்தரவிட்டாா்.










