கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையம் ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் என்.சிவாவிற்கு சிறந்த சமூக சேவகர் விருதினை மதுரையை சேர்ந்த அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் சென்னையில் நடந்த விழாவில் வழங்கப்பட்டது.
கும்மிடிப்பூண்டியை அடுத்த ஈகுவார்பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகைய்யா-விஜயா தம்பதியரின் மகன் என்.சிவா(28). பட்டதாரி ஆசிரியரான இவர் ஈகுவார்பாளையம் ஊராட்சி மன்ற 6-வது வார்டு உறுப்பினராக பணியாற்றி வருகிறார்.
ஈகுவார்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் சிறந்த சமூக சேவகராக அறியப்படும் என்.சிவா மழை காலங்களில் கால்வாய்களை சுத்தம் செய்தல், பழைய குடிநீர் மேல்நிலைத் தொட்டியை மாற்றி புதிய குடிநீர் மேல்நிலை தொட்டியை அமைத்தது, அப்பகுதியில் தடையின்றி மின்சாரம், குடிநீர் ஏற்பாடு செய்தது. முதியோர்களுக்கு ஓய்வூதியம் வாங்கி தருவது, 41 தனி நபர் கழிப்பிட வசதி ஏற்பாடு செய்து தந்தது, ஏழை எளியோருக்கு அரசு திட்டங்கள் மூலம் வீடுகள் அமைத்து தருவது, 11 ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக கல்லூரியில் படிக்க ஏற்பாடு செய்தது , 11 ஆண்டுகளாக மாணவர்களுக்கு இலவச மாலை நேர வகுப்பு எடுப்பது, ஈகுவார்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு 18 அவசர ஊர்தி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை ஏற்பாடு செய்து தந்தது உள்ளிட்ட பல்வேறு நற்பணிகளை செய்துள்ளார்.
இதையும் படிக்க: பொறியியல் கல்லூரிகளில் 50% இடங்கள் காலியாகக் கிடக்கும்?
இந்நிலையில் இவரது சேவையை பாராட்டும் வகையில் மதுரையை சேர்ந்த அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை, ஆக்ஸ்பா பல்கலைக்கழகம், நீதியின் குரல் இணைந்து சென்னை நாரத கான சபையில் நடத்திய அறம் விருதுகள்-2022 நிகழ்வில் சமூக சேவகர் என்.சிவாவிற்கு பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், நீதியின் குரல் நிறுவனர் சி.ஆர்.பாஸ்கரன், மனித நேய அறக்கட்டளை தலைவரும் சென்னை மாநகர முன்னாள் மேயருமான சைதை சா.துரைசாமி, ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே.நவாஸ்கனி, அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை நிறுவனர் பூ.நல்லமணி ஆகியோர் வழங்கி என்.சிவாவின் சேவையை பாராட்டி சிறந்த சமூக சேவகர் விருது வழங்கி பாராட்டினர்.
சமூக சேவகர் விருதினை பெற்ற கும்மிடிப்பூண்டி அடுத்த ஈகுவார்பாளையத்தை சேர்ந்த என்.சிவாவிற்கு கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் தங்கள் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.