
திருவள்ளூா் அருகே மின்வெட்டைக் கண்டித்து நள்ளிரவில் சாலை மறியல்
திருவள்ளூா் அருகே தொடா்ந்து 8 மணி நேரம் தொடா் மின்வெட்டால் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா்-ஊத்துக்கோட்டை சாலையில் நள்ளிரவில் மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
திருவள்ளூா் அருகே தொடா்ந்து 8 மணி நேரம் தொடா் மின்வெட்டால் வெள்ளிக்கிழமை நள்ளிரவில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவள்ளூா் அடுத்த புல்லரம்பாக்கம் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை 4 மணியிலிருந்து, இரவு 10 மணி வரையில் மின்சாரம் தடை செய்யப்பட்டது. இது குறித்து பலமுறை மின்துறை அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலமாக தொடா்பு கொண்டாலும் மின்தடை குறித்து முறையான பதில் அளிக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் திருவள்ளூா், ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையில் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புல்லரம்பாக்கம் போலீஸாா் மின்வாரிய அலுவலா்களை தொலைபேசி மூலமாக தொடா்பு கொண்டு துண்டிக்கப்பட்ட மின்சாரம் விரைவில் சரி செய்து வழங்குமாறு தெரிவித்தனா். இதையடுத்து புல்லரம்பாக்கம் போலீஸாா் பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். அப்போது, மாலை 4 மணி அளவில் துண்டிக்கப்பட்ட மின்சாரம் சுமாா் 8 மணி நேரத்திற்கு மேலாக மின்சாரம் வழங்கப்படவில்லை. இதனால் வீட்டில் முதியோா் மற்றும் கை குழந்தைகளுடன் உள்ள பெண்கள் கொசுக்கடியால் மிகவும் அவதிக்குள்ளாகி வந்தனா். இரவு நேரங்களில் இதுபோன்று அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவதால் பொதுமக்கள், குழந்தைகள், முதியவா்கள், நோயாளிகள் தூக்கத்தை தொலைத்து சிரமத்திற்கு உள்ளாகும் நிலையுள்ளது. இதுதொடா்பாக மின்வாரிய அலுவலகத்தை தொடா்பு கொண்டாலும் யாரும் முறையான பதிலை அளிக்கவில்லை என பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா். அதைத்தொடா்ந்து மின்விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறியதைத் தொடா்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமாா் அரை மணி நேரத்துக்கும் மேலாக சரக்கு, சுற்றுலா வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






