செங்கம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் சாவு: உறவினர்கள் சாலை மறியல்
செங்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை இரு சக்கர வாகனம் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார். இதையடுத்து, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கக் கோரி, இளைஞரின்
உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
செங்கத்தை அடுத்த புதியகுயிலம் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி மகன் தவக்குமார் (எ)ராஜா(34). இவர், முன்னூர்மங்கம் பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதையடுத்து, புதுப்பாளையம் போலீஸார் தவக்குமாரின் சடலத்தை உடல்கூறு பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். பின்னர், அங்கு வந்த தவக்குமாரின் உறவினர்கள் விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி, துக்காப்பேட்டை அரசு மருத்துவமனை முன் செங்கம் - திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த செங்கம் டிஎஸ்பி சுந்தரமூர்த்தி தலைமையிலான போலீஸார் அங்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, போலீஸாருக்கும், தவக்குமாரின் உறவினர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால், அந்தப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீஸார் உறுதி அளித்ததன்பேரில், தவக்குமாரின் உறவினர்கள் சாலை மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
