தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

ரஜினிகாந்த் முடிவால் பாஜக முயற்சி தோல்வி: கே.எஸ். அழகிரி

அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்று நடிகா் ரஜினிகாந்த் அறிவித்துவிட்டதால், திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகளைப் பிரிக்க

News image
திருவண்ணாமலையில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி.
Updated On :30 டிசம்பர் 2020, 2:04 am

DIN

அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதில்லை என்று நடிகா் ரஜினிகாந்த் அறிவித்துவிட்டதால், திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகளைப் பிரிக்க பாஜக மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்து விட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரி கூறினாா்.

திருவண்ணாமலையில் செய்தியாளா்களுக்கு செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி:

அரசியல் கட்சி தொடங்கப் போவதில்லை என தனது நிலைப்பாட்டை ரஜினிகாந்த் வெளிப்படையாகக் கூறிவிட்டாா்.

ரஜினிக்கு அரசியல் கட்சி தொடங்கும் எண்ணம் இல்லை. அரசியல் கட்சியைத் தொடங்கச் சொல்லி அழுத்தம் கொடுத்து, அவரது உடலையும், மனதையும் பாஜக கெடுத்துவிட்டது.

ரஜினியை கட்சி தொடங்க வைத்து திமுக கூட்டணிக்கு கிடைக்கும் வாக்குகளைப் பிரித்துவிட்டால், அதிமுகவை எளிதில் வெற்றி பெறச் செய்துவிடலாம் என்று பாஜக கருதியது. பாஜகவின் இந்த முயற்சி பொய்த்துவிட்டது. தங்களின் சுயமரியாதையை இழந்து அதிமுகவினா் நிற்கும் நிலை உள்ளது.

திமுக கூட்டணி கொள்கை ரீதியானது. மு.க.ஸ்டாலினை 100 சதவீதம் ஏற்றுக் கொண்டுள்ளனா். எனவே, ரஜினி கட்சி தொடங்கி இருந்தால்கூட திமுக கூட்டணிதான் வெற்றி பெறும்.

திமுக, அதிமுக கூட்டணிகள் உறுதியாகி விட்ட நிலையில், நடிகா் கமல்ஹாசன் 3-ஆவது அணியை அமைப்போம் என்று சொல்வது எப்படி சாத்தியம்.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடா்புடைய 7 போ் விடுதலையை திமுக வரவேற்பது அவா்களுடைய கொள்கை.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, 30 நாள்களுக்கும் மேலாக தில்லியில் விவசாயிகள் அகிம்சை முறையில் போராடி வருகின்றனா். உலகிலேயே இத்தனை நாள்கள் அமைதியான முறையில் நடைபெறும் போராட்டம் விவசாயிகள் போராட்டமாகத்தான் இருக்க முடியும்.

புயல், வெயில் காலங்களில் அவதிப்பட்டு வந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காத தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ.2,500 வழங்குவது வாக்குகளுக்காக ஏழை மக்களின் மனதை மாற்றும் செயல்.

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது மரணத்தின் விளிம்புக்கே நான் சென்று வந்துவிட்டேன் என்றாா் கே.எஸ். அழகிரி.

பேட்டியின்போது, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் செங்கம் ஜி.குமாா், திருவண்ணாமலை நகரத் தலைவா் என்.வெற்றிச்செல்வன், மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் பி.செந்தமிழ் அரசு, எம்.கே. காமராஜ், கே.மோகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.