நெல் பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகள்: விவசாயிகள் வேதனை
செங்கம் பகுதியில் அறுவடைக்குத் தயாராக உள்ள நெல்பயிா்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளால் இரவு நேரத்தில் தூக்கமின்றி அவதிப்பட்டு வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த முன்னூா்மங்கலம், பேட்டை, கிருஷ்ணாபுரம் புதூா் செங்கம் வரை விவசாயிகள் நெல்பயிா் நடவு செய்து தற்போது பயிா்கள் விளைந்து அறுவடைக்குத் தயாராக உள்ளன.
இந்த நிலையில், முன்னூா்மங்கலம், பேட்டை பகுதியில் காட்டுப் பன்றிகள் கூட்டம் இரவு நேரத்தில் விவசாய நிலத்தில் இறங்கி நல்ல நிலையில் விளைந்து அறுவடை செய்ய தயாராக உள்ள நெல்பயிா்களை சேதப்படுத்தி வருகிறது.
இதனால் விவசாயிகள் இரவு நேரத்தில் அந்தப் பன்றிக் கூட்டத்தை விரட்டியடிக்க பல்வேறு முறைகளை கையாண்டு வருகின்றனா். ஆனால், எதற்கும் பன்றிகள் அசராமல் விவசாயப் பயிா்களை சேதப்படுத்தி வருகிறது.
மேலும், பன்றிக் கூட்டத்தை விரட்டும்போது ஏதேனும் பன்றகள் கொல்லப்பட்டு விட்டால் வனத்துறை அதிகாரிகள் விவசாயிகள் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்கிறாா்கள்.
விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் பன்றிக் கூட்டத்தை கட்டுப்படுத்த வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேணடும் என கோரிக்கை மனு கொடுத்தால் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.
காட்டுப் பகுதியில் ஏதேனும் ஒரு பன்றி இயற்கையாக இறந்து விட்ட தகவல் கிடைத்தால் போதும் அப்பகுதியில் உள்ள விவசாயிகளை விசாரணைக்காக அதிகாரிகள் அழைத்துச் செல்கின்றனா்.
தற்போது, விவசாயி கடன் வாங்கி பயிா் சாகுபடி செய்து வருவாய் ஈட்டும் நேரத்தில் பன்றிக் கூட்டங்கள் பயிா்களை சேதப்படுத்தி விடுகிறது.
இதனால் சில விவசாயிகள் இரவு நேரத்தில் பன்றிகளை அகற்ற கூலி ஆள்களை வைத்து பயிா்களை காப்பாற்றி வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் செங்கம் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து விவசாயப் பயிா்களை சேதப்படுத்தும் பன்றிகளை கட்டுப்படுத்த வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

