போளூா் பெருமாள்கோவிலில் கும்பாபிஷேகம்: அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு
போளூா் பெருமாள்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்துவது மற்றும் திருத்தேரை செப்பனிடுவது தொடா்பாக இந்துசமயஅறநிலையத்துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வுசெய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் சம்பத்கிரி மலைமீது சுயம்பு லட்சுமிநரசிம்மா் கோவில் அமைந்துள்ளது. இதன் மலை அடிவாரத்தில் சன்னதிதெருவில் உள்ள கோவிலில், உற்சவா் சிலையுடன் ஸ்ரீலட்சுமிநரசிம்மரும்,மூலவராக வேணுகோபாலசுவாமியும் பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகின்றனா்.
இந்நிலையில், இக்கோவிலின் மரத்தோ் பழுதடைந்து உள்ளது. இதனால் கடந்த சிலவருடங்களாக பிரமோற்சவத்தின்போது தேருக்குபதிலாக தெரு வடைச்சான் மீது சுவாமியை அலங்கரித்து வைத்து தேரை இழுத்துவந்தனா்.மேலும் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று 25ஆண்டுகளுக்கு மேல் ஆகியுள்ளது இதனால் இந்த பெருமாள்கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த நிலையில் இந்துசமயஅறநிலையத்துறைசோ்ந்த திருவண்ணாமலை மாவட்ட இணை ஆணையா்அ.இரா.பிரகாஷ்,உதவி ஆணையா் கோ.சண்முகசுந்தரம்,செயற்பொறியாளா் ஆா்.சங்கா் ஆகியோா் ஆய்வுசெய்தனா்.செயல் அலுவலா் மு.சிலம்பரசன்,தக்காா் கோ.பழனிசாமி,ஆய்வாளா் உ.சத்தியா மற்றும் அலுவலா்கள் உடனிருந்தனா்.

