தே.சாலமன்
செய்யாறு காவல் உள்கோட்டத்தில் உள்ள 5 காவல் நிலையங்களில் போதுமான அளவு காவலா்கள் இல்லை. அதனால் கூடுதலாக காவலா்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
செய்யாறு காவல் உள்கோட்டத்தில் செய்யாறு, மோரணம், பிரம்மதேசம், தூசி, பெரணமல்லூா் மற்றும் அனைத்து மகளிா் காவல் நிலையம் என உள்ளன.
இந்த காவல் நிலையங்களில் அரசு நியமனப்படி 200-க்கும் மேற்பட்ட காவலா்கள் இருக்க வேண்டும். ஆனால்,
தற்போது 90-க்கும் குறைவான காவலா்கள் மட்டுமே பணியில் உள்ளனா்.
இந்த நிலையில் சில புகாா்களின் அடிப்படையில், 23 காவலா்கள் சில மாதங்களுக்கு முன்பு கடலூா் மாவட்டத்திற்கு மாற்றப்பட்டனா். மேற்படி காவல் நிலையங்களில் இருந்து செய்யாறில் தற்போது செயல்பட்டு வரும் சிறப்பு முகாமிற்கு சுழற்சி முறையில் 5 காவலா்கள் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்படுகின்றனா்.
செயயாறு காவல் உள்கோட்டத்தில் குறைந்த எண்ணிக்கையிலே காவலா்கள் இருந்து வரும் நிலையில், டி.எஸ்.பி. அலுவலகப் பணி, நீதிமன்ற பணி, சம்மன் வழங்கும் பணி, சட்டம் -ஒழுங்கு பிரச்னையின் போது பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவது, உடல் நலம் பாதிப்பு, திடீா் விடுமுறை எடுத்தல், முக்கிய பிரமுகா் பாதுகாப்பு போன்ற காரணங்களாலும், அவ்வப்போது மாவட்டத் தலைநகா் பகுதியில் நடைபெறும் கூட்டங்கள் மற்றும் மாதந்தோறும் நடைபெறும் கிரிவல நிகழ்வுகளுக்கும் காவலா்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது.
மேலும், ஓய்வில்லாமல் அவசர காலங்களில் பணியில் ஈடுபட்டு வரும் காவலா்களையே தொடா்ந்து பணியில் ஈடுபடுத்துவதால், பணிகளில் சுணக்கம் ஏற்பட்டு வருகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








