
குழந்தைகள் காப்பக பராமரிப்பு பணியாளர்களின் வேலை திடீரென பறிக்கப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட அப்பணியாளர்கள் அங்கன்வாடி பணியாளர், உதவியாளராக பணிவாய்ப்பு கோரி வேலூர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
வேலூர் மாவட்ட மக்கள் குறைதீர் நாள் கூட்டம் ஆட்சியர்
எஸ்.ஏ.ராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், வேலூர் மாவட்டத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு குழந்தைகள் காப்பக பராமரிப்புப் பணியாளர்களாக சேர்ந்தோம். ஆனால், கடந்த 11-ஆம் தேதி எங்களை வேலையை விட்டுச் செல்லும்படி வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளனர். இப்படி எங்களை மாறிமாறி வீட்டுக்கு அனுப்புவது, வேலைக்கு வரவழைப்பது என நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இதனால் எங்களது வாழ்வதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
வயது வரம்பும் அதிகமாக உள்ளதால் நாங்கள் வேறு வேலைக்குச் செல்ல இயலாது. எனவே, வயது வரம்பின்றி எங்களுக்கு அங்கன்வாடி பணியாளர், உதவியாளராக பணியில் அமர்த்திட வேண்டும். வேலூர் குழந்தைகள் காப்பகங்களில் பணிபுரியும் பணியாளர், உதவியாளர்களுக்கு 8 மாத சம்பளம் வழங்கவில்லை. காய்கறி, பிஸ்கெட் வாங்கியதற்கான ரசீதுகளும் சீர்செய்யப்படவில்லை. இவற்றை வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் மனுவில் தெரிவித்துள்ளனர்.
காட்பாடி அருகே பொன்னை என்பிஎம் பாளையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், பொன்னை எம்பிஎம் பாளையம் கிராமத்தில் திம்மியம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு ஆண்டுதோறும் திருவிழா நடத்தப்படுவது வழக்கம். இந்த அம்மன் கோயில் அருகே விநாயகர் கோயில் கட்ட முடிவு செய்யப்பட்டது. ஆனால், அந்த இடத்தில் தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து பட்டா மாற்றம் செய்திட முயற்சி மேற்கொண்டு வருகிறார். இதனை உடனடியாக தடுத்து நிறுத்திட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் விருபாட்சிபுரம் முருகன் நகரைச் சேர்ந்தவர்கள் அளித்த மனுவில், விருபாட்சிபுரம் முருகன் நகர் பகுதியில் பல ஆண்டுகளாக வசித்து வரும் எங்களுக்கு சொந்தமாக நிலமோ, வீடோ கிடையாது. வாடகை வீடுகளில் வசிக்கிறோம். இந்தப் பகுதியில் 1.82 ஏக்கர் அரசு நிலம் உள்ளது. அதில், திருநங்கைகள், தியாகிகள் குடும்பத்தினருக்கு வீட்டுமனைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த நிலத்தில் எங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீட்டுமனை வழங்கிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.
இதேபோல், வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 405 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றின் மீது விரைவான நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
இதில், சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலர் பேபி இந்திரா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வேணுசேகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




