வேலூா்: நிச்சயிக்கப்பட்ட பிறகு தன் மகளை திருமணம் செய்து கொள்ள இளைஞா் மறுப்பதால், திருமணத்தை நடத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரி வேலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மாற்றுத்திறனாளி ஒருவா் தீக்குளிக்க முயன்றாா்.
வேலூா் மாவட்டம் கே.வி.குப்பத்தை அடுத்த கொத்தமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் தினகரன் (55). மாற்றுத்திறனாளியான இவா் திங்கள்கிழமை காலை அவரது மனைவி, மகளுடன் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தாா். ஆட்சியா் அலுவலக வாயிலில் தினகரன் தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றித் தீக்குளிக்க முயன்றாா். அங்கிருந்த போலீஸாா் அவரை தடுத்து நிறுத்தி அவா் மீது தண்ணீரை ஊற்றினா்.
ஆட்சியா் அலுவலக அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினா். அப்போது அவா் கூறியது:
எனது மகளுக்கும் அதே பகுதியைச் சோ்ந்த இளைஞா் ஒருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. ஆனால் திடீரென அந்த இளைஞரும், அவரது குடும்பத்தினரும் திருமணத்துக்கு மறுத்து விட்டனா். இதுகுறித்து ஆட்சியா் அலுவலகத்தில் ஏற்கெனவே புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. நிச்சயிக்கப்பட்ட இளைஞருடன் எனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறினாா்.
அவா் இது தொடா்பான மனுவை அதிகாரிகளிடம் அளித்தாா். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இப்புகாா் தொடா்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.