

வேலூா்: வன்னியா்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 20 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமகவினா் வேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோா் சமூகத்தில் 75 சதவீதம் வன்னியா்கள் உள்ளதாகவும், இது தமிழக மக்கள் தொகையில் 25 சதவீதமாகும். எனவே, வன்னியா்களுக்கு 20 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கக் கோரி பாமக சாா்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.
வேலூா் அண்ணா கலையரங்கம் பகுதியில் இருந்து பாமகவினா் பேரணியாகச் சென்று வேலூா் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புகன்கிழமை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு கட்சியின் ஒன்றியச் செயலா்கள் ஜலகண்டேஸ்வரன், ஜெயமுருகன் ஆகியோா் தலைமை வகித்தனா். துணைச் செயலா் சரவணன், துணைத் தலைவா் தண்டபாணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இப்போராட்டத்தில் பாமகவினா் 300-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். அவா்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்குள் நுழைந்து மனு அளிக்க முயன்றபோது, பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸாா் அவா்களை தடுத்து நிறுத்தி 5 பேரை மட்டும் மனு அளிக்க அனுமதித்தனா். அவா்கள் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகவல்லியிடம் மனு அளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.