டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சாலை வசதி இல்லாததால் சடலத்தை டோலிகட்டி தூக்கிச் சென்ற அவலம்: கண்டுகொள்ளாத வாணியம்பாடி நிர்வாகம்

வாணியம்பாடி அருகே உடல்நிலை சரியில்லாமல் இறந்த மூதாட்டியின் சடலத்தை மலை கிராமத்திற்கு சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் டோலிகட்டி நடந்தே தூக்கி சென்ற அவலம் நடந்துள்ளது.

News image
சாலை வசதி இல்லாததால் சடலத்தை டோலிகட்டி தூக்கிச் சென்ற அவலம்
Updated On :9 நவம்பர் 2022, 2:09 pm

DIN

வாணியம்பாடி அருகே உடல்நிலை சரியில்லாமல் இறந்த மூதாட்டியின் சடலத்தை மலை கிராமத்திற்கு சுமார் 7 கிலோ மீட்டர் தூரம் டோலிகட்டி நடந்தே தூக்கி சென்ற அவலம் நடந்துள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் நெக்னாமலை என்னும் மலை கிராமம் உள்ளது. இந்த மலை கிராமம் மலையடிவாரத்தில் இருந்து  சுமார் 1200 அடி உயரத்தில் அமைந்துள்ளது. 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவரும் இந்த மலைகிராமத்தில் சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளைக் கடந்தும் சாலை வசதியின்றி அனைத்து தேவைகளுக்கும் மலை அடிவாரத்திலிருந்து 7 கிலோ மீட்டர் தினமும் நடந்து சென்று வருகின்றனர்.

இந்த மலை கிராமத்திற்கு சாலை வசதி அமைத்து தரக்கோரி அரசுக்கு பல முறை கோரிக்கை மனுக்களை அளித்தும் பல்வேறு போராட்டங்களை நடத்தியும் தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும்  இதுவரை எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

ஒவ்வொரு உள்ளாட்சி, நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலுக்கும் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க மட்டுமே வருகின்றனர். வெற்றி பெற்ற பின்னர் அந்த மலை கிராமத்திற்கு வருவதுமில்லை, வாக்குறுதிகளை நிறவேற்றுவதும் இல்லை என மலை கிராம மக்கள் பல குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர்.

அங்கு பிழைக்க வழி இல்லாததால் பிழைப்பு தேடி அங்கிருந்து வெளியூர்  மற்றும் வெளி மாநிலங்களுக்கு செல்வோர் திடீர் மரணம் ஏற்பட்டால் அவர்களை அடக்கம் செய்ய அவருடைய சொந்த கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால் 7 கிலோ மீட்டர் சடலத்தை டோலிகட்டி எடுத்துசெல்லும் அவல நிலை தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இந்த மலை கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி எல்லம்மாள் என்பவர் கடந்த சில தினங்களாக உடல்நிலை சரியில்லாமல் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  அவர் உயிரிழந்தார். அவரின் சடலத்தை  மூங்கில் பிரம்பு மூலம் டோலிகட்டி அந்த மலை கிராமமக்கள் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள அந்த நெக்னமலை கிராமத்திற்கு  தூக்கி சென்ற  காட்சி  கிராம மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நாட்டில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளை கடந்தும்  சாலை வசதி இல்லாமல் அவதிப்பட்டு வரும் மலை கிராம மக்களுக்கு எப்போது தீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் மற்றும் சமூக அலுவலர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.