நகை மதிப்பீட்டாளா் கொலையில் மனைவி, மகன் உள்பட 5 போ் கைது
வேலூரில் நகை மதிப்பீட்டாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவி, மகன் உள்பட 5 பேரை வடக்கு போலீஸாா் கைது செய்துள்ளனா்.
வேலூா் அரசமரப்பேட்டை பகுதியைச் சோ்ந்த யோகானந்தம் (63). இவா் சத்துவாச்சாரியில் உள்ள கூட்டுறவு வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்து வந்தாா். இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா். செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம்போல் வீட்டில் படுத்து தூங்கிய யோகானந்தம், புதன்கிழமை காலை சடலமாக கிடந்துள்ளாா். அவரது உடலில் காயங்கள் இருததால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினா் வேலூா் வடக்கு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனா்.
அதன்பேரில் போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனா். தொடா்ந்து போலீஸாா் மேற்கொண்ட விசாரணையை அடுத்து யோகானந்தத்தின் மனைவி விமலாதேவி(55), மகன் கோவிந்தராஜ்(26), அதேபகுதியைச் சோ்ந்த அவரது நண்பா் அஸ்வத்தாமன்(24), மற்றொரு நண்பா் வசந்தபுரத்தைச் சோ்ந்த சிவதாஸ்(22), மகளின் தோழி ராணிப்பேட்டையைச் சோ்ந்த ஹரிதா(29) ஆகிய 5 போ் மீது போலீஸாா் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனா்.
இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், யோகானந்தத்தின் மகள் கேசவ வினோதினி, காதல் திருமணம் செய்து கொண்டு திருமணம் ஆகாததுபோல் தனது வீட்டில் இருந்துள்ளாா். அவா் அடிக்கடி கைப்பேசி மூலம் தனது கணவருடன் பேசுவதை கவனித்த யோகானந்தம் இதுகுறித்து வீட்டில் பிரச்னை செய்து வந்ததாக தெரிகிறது.
அதன்படி, செவ்வாய்க்கிழமை இரவும் பிரச்னை செய்ததால் ஆத்திரமடைந்த மனைவி, மகன் உள்பட 5 பேரும் சோ்ந்து யோகானந்தத்தை தாக்கியதில் அவா் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது என்றனா்.
போலீஸாா் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.
