மஞ்சூர், ஜன. 8: வனத் தீயைக் கட்டுப்படுத்தவும், காட்டுத் தீயால் வனங்கள் பாதிக் காமல் இருக்கவும் குந்தா வனச் சரகத்தில் சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு தீ தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் பனிப் பொழிவு காரணமாக வனப் பகுதிகள், புல்வெளிகள் பனியில் கருகி விடும். தொடர்ந்து பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான வெயில் காலத்தில் பனியால் கருகிய செடி, கொடி உள்ளிட்டவைகள், காய்ந்து விடும்.
பின்னர் ஏற்படும் காட்டுத் தீயால், ஏராளமான மரம், செடி, கொடிகள் எரிந்து வனப் பகுதியில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன.
மேலும், வன விலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே, வெயில் காலம் துவங்குவதற்கு முன் வனப் பகுதிக்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீ தடுப்புக் கோடுகள் அமைக்கப்படும்.
குந்தா வனச் சரகத்தில் தாய்சோலை, மீக்கேரிபெட்டு, தணியக்கண்டி, பிக்கட்டி, அதிகரட்டி உள்ளிட்ட வனப் பகுதிகளில் சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு தீ தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து குந்தா வனச்சரகர் ராமசாமி சனிக்கிழமை கூறியது:
வெயில் காலத்துக்கு முன்பாக வனப் பகுதியில் தீ தடுப்புக் கோடுகள் அமைப்பது வழக்கம். இருப்பினும், காட்டுத் தீ ஏற்படும்போது, அதன் பாதிப்புகளைக் கட் டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
குந்தா சரகத்தில் 20 தீ தடுப்புக் காவலர்கள், 20 வேட்டைத் தடுப்புக் காவலர்கள் உள்ளிட்ட வன ஊழியர்கள் காட்டுத் தீ தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபடுவார்கள்.
கைகாட்டி, பிக்கட்டி, அதிகரட்டி, தாய்சோலை, கோடேரி, கீளூர், கெத்தை ஆகிய குந்தா வனச் சரகத்துக்கு உள்பட்ட இடங்களில் ரோந்துப் பணிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வனப் பகுதியை ஒட்டியுள்ள கிராமங்களில் காட்டுத் தீ குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நடத்தி, மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.