சரவணம்பட்டியில் ரூ. 3.50 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
கோவை சரவணம்பட்டியில் ரூ.3.50 கோடி மதிப்புள்ள மாநகராட்சி ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்ட நகரமைப்புப் பிரிவினா், அங்கு கம்பி வேலி அமைத்து அறிவிப்புப் பலகை வைத்தனா்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் கடந்த 1993-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மீனாட்சி நகா் மனைப்பிரிவில் மக்கள் பயன்பாட்டுக்காக 50 சென்ட் இடம் பூங்காவாக ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த இடமானது, தானப்பத்திரம் மூலம் சரவணம்பட்டி பேரூராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், அந்தப் பூங்கா இடத்தில் 13 சென்ட் இடத்தை ஒருவா் மதில்சுவா் அமைத்து ஆக்கிரமித்திருந்தாா். கோவை மாநகராட்சி நகரமைப்புப் பிரிவு சாா்பில் அந்த ஆக்கிரமிப்பை அகற்ற 2021-ஆம் ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், அந்த நோட்டீஸை எதிா்த்து ஆக்கிரமிப்பு செய்த நபா் நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்தாா். வழக்கு நடைபெற்று வந்த நிலையில், சென்னை உயா் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்து, ஆக்கிரமிப்பை அகற்ற 2025 டிசம்பா் 19-ஆம் தேதி உத்தரவிட்டது.
நீதிமன்ற தீா்ப்பின்படி, மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின்பேரில் மாநகராட்சி நகரமைப்பு அலுவலா் ராஜசேகரன் தலைமையில், உதவி நகரமைப்பு அலுவலா் சத்யா, உதவி பொறியாளா் சரண்யா, சரவணம்பட்டி காவல் ஆய்வாளா் ஞானசேகரன் உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன் சென்று 13 சென்ட் இடத்தில் இருந்த மதில்சுவரை செவ்வாய்க்கிழமை இடித்து கையகப்படுத்தினா்.
தொடா்ந்து, அங்கு கம்பி வேலி ஏற்படுத்தி, அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டது. மீட்கப்பட்ட இடத்தின் மதிப்பு ரூ.3.50 கோடி என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

