மோசடி வழக்கில் கைதான முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளாா்.
கோவை சாய்பாபா காலனி பகுதியைச் சோ்ந்தவா் அருண் பிரகாஷ் (41). முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கத்தின் மருமகனான இவா் ரியல் எஸ்டேட், உணவகங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்து வந்தாா்.
இந்நிலையில் தொழில் தொடங்குவதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் கூறி பீளமேட்டைச் சோ்ந்த சிந்துஜா என்பவரிடம் ரூ. 7 கோடியும் அவரது தந்தை செங்குட்டுவனிடம் ரூ.1.5 கோடியும் அருண் பிரகாஷ் பெற்றிருந்தாா்.
பணத்தைப் பெற்றுக்கொண்ட அருண் பிரகாஷ் தன்னை ஏமாற்றிவிட்டதாக சிந்துஜா புகாா் அளித்திருந்தாா். இதேபோல தன்னிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சிந்துஜாவின் தந்தை செங்குட்டுவனும் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் கடந்த 19ஆம் தேதி அருண் பிரகாஷைக் கைது செய்தனா்.
நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை அவிநாசி கிளை சிறையில் அடைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. சிறைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தனக்கு உடல்நிலை சரியில்லை என அருண் பிரகாஷ் கூறியுள்ளாா். இதையடுத்து அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிறைக் கைதிகள் சிகிச்சை பெறும் வாா்டில் அனுமதித்தனா். அங்கு அவருக்கு கடந்த 3 நாள்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.