கோவையில் காதலை ஏற்க மறுத்த பெண்ணுக்கு கத்திக்குத்து!
By DIN | Published On : 12th July 2022 12:10 PM | Last Updated : 12th July 2022 01:17 PM | அ+அ அ- |

கோவை: கோவையில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்த 21 வயது இளம் பெண் ஒருவர் லட்சுமி மில்ஸ் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பைனான்ஸ் துறை பயிற்சி பணியாளராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில் அந்த பெண், சேலம் மாவட்டம் நெத்திமேடு பகுதியை சேர்ந்த சண்முகலிங்கம் மகன் தினேஷ் (26) என்பவருடன் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது.
இதையடுத்து இருவரும் நண்பர்களாக பழகி வந்த நிலையில், தினேஷ் கடந்த சில நாட்களுக்கு முன் கோவை வந்து அந்த பெண்ணை சந்தித்து பேசியுள்ளார். இதையடுத்து பெண்ணிடம் தன் காதலை கூறியுள்ளார். ஆனால் அந்த பெண் காதலிக்க மறுத்துள்ளார். ஆனால் தொடர்ந்து தன்னை காதலிக்க வேண்டும் என தினேஷ் வற்புறுத்தியதால் அவரது எண்ணை அந்த பெண் பிளாக் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ் இன்று காலை அந்த பெண் பணியாற்றும் நிறுவனத்திற்கு வந்து தனது காதலை ஏற்றுக்கொள்ளுமாறு மிரட்டியுள்ளார். ஆனால் தொடர்ந்து பெண் மறுத்ததால் தினேஷ் அதன் மறைத்து வைத்திருந்த கத்தியால் பெண்ணின் முகம், தோள்பட்டை, தலை பகுதியில் வெட்டியுள்ளார்.
இதையடுத்து அங்கு பணியில் இருந்தவர்கள் தினேஷை மடக்கி பிடித்து ரேஸ்கோர்ஸ் காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து தினேஷை கைது செய்த காவல் துறையினர் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
பட்டப்பகலில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை சக ஊழியர்கள் முன்னால் இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் அங்கு பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.