கோவை மாவட்டம், துடியலூரைடுத்த நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சார்ந்த இளைஞர் ஒருவர் பர்மிங்காம் கால்வாயில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதிகள் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள தென்றல் நகரைச் சார்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் ஜீவானந்த்(25). இவர் கடந்த 2022 ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் லண்டனில் பர்மீங்கஹாமில் உள்ள ஆஸ்டன் யுனிவர்சிட்டியில் உலகப் பொருளாதாரவியலில் முதுநிலை மேற்படிப்பு படிப்பதற்காக சென்றிருந்தார். கடந்த ஓராண்டாக அங்கு தங்கி படித்து வந்த சூழ்நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில் பர்மிங்காம் கால்வாயில் உயிர் ஆபத்தான தண்ணீரில் மூழ்கிய நிலையில் காணப்பட்டார்.
இது குறித்த தகவல் அறிந்த பர்மிங்காம் காவல்துறையினர் உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினருடன் சென்று அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு ஜீவானந்தத்தின் நண்பர் வெள்ளிக்கிழமை தகவல் அளித்தார். அதன் பேரில் குடும்பத்தினர் இந்தியவெளியுறவுத் துறை மூலம் ஜீவானந்தத்தின் உடலை இந்தியாவிற்கு கொண்டு வருவதற்கான பணிகளை மேற்கொண்டு உள்ளனர்.
இறந்து போன ஜீவானந்த் கோவை கிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரானிக் துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர் என்பதும் இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டியை சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது குறித்து பெரியநாயக்கன் பாளையம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.