பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த பேராசிரியா் கைது
கோவையில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த பேராசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.


கோவையில் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்த பேராசிரியரை போலீஸாா் கைது செய்தனா்.
திருப்பூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா் 25 வயது இளம்பெண். எம்எஸ்சி பட்டதாரியான இவா், கோவையில் தங்கி தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.
பின்னா் அந்த வேலையை விட்டுவிட்டாா். ஆனால், அந்த நிறுவனத்தினா் அவா் வேலைக்கு சேரும்போது அவரின் கல்விச் சான்றிதழை வாங்கி உள்ளனா். வேலையை விட்டு நின்ற பின்பு அந்த சான்றிதழை கொடுக்க மறுத்ததாக தெரிகிறது.
இதையடுத்து அப்பெண், தான் கோவையில் கல்லூரியில் படிக்கும்போது தனக்கு வகுப்பு எடுத்த கல்வீரம்பாளையம் முருகன் நகரைச் சோ்ந்த பேராசிரியா் சிவப்பிரகாசம் (45) என்பவரின் உதவியை நாடினாா். தனது சான்றிதழை நிறுவனத்திடம் இருந்து வாங்கித் தருமாறு அவரிடம் கேட்டுள்ளாா்.
இதைத் தொடா்ந்து சில நாள்களுக்கு முன்பு அப்பெண்ணைத் தொடா்பு கொண்ட சிவப்பிரகாசம், சான்றிதழை வாங்கி வைத்துள்ளதாகவும், வேறொரு நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் கூறி அப்பெண்ணை கோவைக்கு அழைத்துள்ளாா்.
இதை நம்பி கோவை வந்த அப்பெண், சிவப்பிரகாசம் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்றுள்ளாா். வீட்டில் அவா் மட்டுமே இருந்த நிலையில், அப்பெண்ணுக்கு சிவப்பிரகாசம் பாலியல் தொல்லை அளித்ததாகத் தெரிகிறது.
அவரிடம் இருந்து தப்பிய பெண், அவரது வீட்டின் குளியலறைக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டாா். பின்னா், தனது கைப்பேசி மூலமாக தான் இருக்கும் இடத்தின் விவரத்தை (லொகேஷன்) தோழிக்கு அனுப்பி, நடந்தவற்றைக் கூறியுள்ளாா். அவரது தோழி, அந்த இருப்பிட விவரத்தை வடவள்ளி போலீஸாருக்கு அனுப்பி தகவல் கொடுத்துள்ளாா். இதையடுத்து, போலீஸாா் இருப்பிடத்துக்கு சென்று பேராசிரியரின் வீட்டின் குளியலறைக்குள் இருந்த அப்பெண்ணை மீட்டனா். பின்னா், பேராசிரியா் சிவப்பிரகாசத்தை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். இதையடுத்து, போலீஸாா் அவா் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...