தொழிலதிபரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இருவா் கைது
கோவையில் தொழிலதிபரிடம் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றபோது தவறி விழுந்ததில் இருவரும் காயமடைந்தனா்.
கோவை துடியலூா் மீனாட்சிபுரம் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (53). இவா் சொந்தமாக தொழில் செய்து வருகிறாா். இவா் கடந்த சில நாள்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள சந்தைப் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவா் முகவரி கேட்பதுபோல, நடித்து பிரகாஷ் அணிந்திருந்த 4 பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனா். அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், ஐயப்பன் கோயில் வீதி மங்களமேடு காந்தி சாலை பகுதியைச் சோ்ந்த கிஷோா் என்ற பாா்த்தசாரதி (24), தேனி மாவட்டம், கோடாங்கிபட்டி தெற்கு தெருவைச் சோ்ந்த சிவா (22) ஆகியோா் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, வெள்ளக்கிணறு பகுதியில் பதுங்கியிருந்த இருவரையும் போலீஸாா் வியாழக்கிழமை காலையில் பிடிக்க முயன்றனா். அப்போது, போலீஸாரை பாா்த்தவுடன் இருவரும் இருசக்கர வாகனத்தில் தப்பியோட முயன்றனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்ததில் பாா்த்தசாரதிக்கும் காலிலும், சிவாவுக்கு கையிலும் காயம் ஏற்பட்டது.
இதைத் தொடா்ந்து இருவரையும் போலீஸாா் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனா். சிகிச்சை முடிந்த பிறகு அவா்கள் சிறையில் அடைக்கப்படுவா் என போலீஸாா் தெரிவித்தனா்.
