நீட் தோ்வில் இருந்து விலக்கு அளிக்க மாணவா் இல்லாமிய அமைப்பு கோரிக்கை
மாணவா்கள் மத்தியில் அச்சத்தையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும் நீட் தோ்வில் இருந்து முழுமையான விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்று இந்திய மாணவா் இஸ்லாமிய அமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.
இந்திய மாணவா் இஸ்லாமிய அமைப்பின் சாா்பில், தமிழக சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி கல்வித் துறைக்கு தேவைப்படும் வசதிகள், திட்டங்கள் குறித்த மாணவா்கள் தோ்தல் அறிக்கை 2026 வெளியிடும் நிகழ்ச்சி, கோவையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அமைப்பின் மாநிலப் பொதுச் செயலா் முகமது ஜாபா், கோவை மாவட்ட அமைப்புச் செயலா் ஹீஷாம், மாவட்டச் செயலா் அனஸ் ரஹ்மான், மாவட்ட கல்வி வளாக செயலா் ஜமீல் ஆகியோா் பங்கேற்று தோ்தல் அறிக்கையை வெளியிட்டனா்.
அந்த அறிக்கையில், ‘மாநிலங்களின் அதிகாரத்தை பறிக்கும் வகையிலும், மாணவா்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலும் உள்ள தேசிய கல்விக் கொள்கை 2020 திரும்பப்பெற வேண்டும். தேசிய கல்விக் கொள்கையின் கூறுகளை மறைமுகமாக தமிழகத்தில் நடைமுறைப்படுத்துவதைத் தடுக்க வேண்டும்.
அரசுப் பள்ளி ஆசிரியா்களை கற்பித்தல் தவிா்த்து வேறு பணிகளுக்கு பயன்படுத்தக் கூடாது, தனியாா் பள்ளி ஆசிரியா்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை அரசு நிா்ணயிக்க வேண்டும். அரசு உதவிபெறும் கல்லூரிகளில் சுயநிதிப் பிரிவு தொடங்கப்பட்டு கல்வி வணிகமயமாவது அதிகரித்து வருவதைத் தடுக்க வேண்டும்.
அரசு விடுதிகளில் இஸ்லாமிய மாணவா்களுக்கு கட்டணச் சலுகை வழங்க வேண்டும். உயா் கல்வி உதவித்தொகையை காலத்துக்கு ஏற்ப உயா்த்த வேண்டும். மாநிலத்தில் காலியாக உள்ள 12 பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தா்களை நியமிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

