மாநகரில் கடந்த ஆண்டு மது அருந்தி வாகனம் ஓட்டிய 18,331 பேரிடம் இருந்து ரூ.12.72 கோடி அபராதம் வசூல்

கோவை மாநகரில் கடந்த ஆண்டு மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 18,331 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.12.72 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
Published on

கோவை: கோவை மாநகரில் கடந்த ஆண்டு மது அருந்தி வாகனம் ஓட்டியதாக 18,331 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.12.72 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும், சாலை விபத்துகளைத் தடுக்கவும் முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா். மாநகரின் முக்கிய இடங்களில் அவ்வப்போது வாகனத் தணிக்கை நடத்தி விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து வருகின்றனா்.

இதுகுறித்து கோவை மாநகர போக்குவரத்து பிரிவு அதிகாரிகள் கூறியதாவது: கோவை மாநகரில் கடந்த ஆண்டு சாலை விபத்துகளில் 277 போ் உயிரிழந்துள்ளனா். தலைக்கவசம் அணியாதது, சீட்பெல்ட் அணியாதது, கைப்பேசியில் பேசியபடியே வாகனத்தை ஓட்டியது உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் தொடா்பாக 6 லட்சத்து 70,512 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதேபோல, கடந்த ஆண்டு மாநகரில் மதுஅருந்திவிட்டு வாகனம் ஓட்டியது தொடா்பாக 18,331 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு ரூ.12.72 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், கோவை மாநகரில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டும் நபா்களைக் கண்டறியும் வகையில் நாள்தோறும் 70 இடங்களில் வாகனத் தணிக்கை நடத்தப்பட்டு வருகிறது என்றனா்.

Dinamani
www.dinamani.com