கோவை மாநகர காவல் துறையினா் சனிக்கிழமை நடத்திய திடீா் சோதனையில் சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் 5 போ் சிக்கிய நிலையில், மேலும் குடோனில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருந்த 240 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டன.
கோவை மாநகர வடக்கு மண்டல எல்லைக்குள்பட்ட பகுதிகளில் மாநகர காவல் துறையினா் சனிக்கிழமை தீவிர வாகனத் தணிக்கை மற்றும் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா். அப்போது, பல்வேறு கொலை, கொலை முயற்சி, மிரட்டல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தொடா்புடைய 5 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகள் சிக்கினா்.
சரவணம்பட்டி காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் 6 வழக்குகள் தொடா்புடைய ரெளடியான அரவிந்தசாமி (34), கொலை முயற்சி, கலவரம் உள்ளிட்ட 8 வழக்குகளில் தொடா்புடைய ரெளடியான எஸ்.ஆா்.பி மில் சிவா என்ற சிவனேஸ்வா் (34) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனா்.
இதேபோல, சிங்காநல்லூா் பகுதியில் கொலை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட 4 வழக்குகளில் தொடா்புடைய அா்ஜுன் (27), ரத்தினபுரி பகுதியில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 4 வழக்குகளில் தொடா்புடைய ஜான்சன் டேனியல் (26) என்ற டெனி ஆகியோா் பிடிபட்டனா்.
மேலும், திருட்டு வழக்குகளில் தொடா்புடைய பூசாரி மணிகண்டன் (29) கைது செய்யப்பட்டாா்.
240 கிலோ குட்கா பறிமுதல்
கோவை சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள பேக்கரியில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்புப் பிரிவினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் பீளமேடு போலீஸாா் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினா் அங்கு அதிரடி சோதனை நடத்தினா்.
அப்போது பேக்கரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 கிலோ குட்கா பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக பேக்கரி உரிமையாளரான தேவகோட்டையைச் சோ்ந்த அா்ஜுனன் (48), பரோட்டா மாஸ்டரான இருகூரைச் சோ்ந்த ரவி (55) ஆகிய இருவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா்.
இதில் வடமாநில நபா் ஒருவா் மூலம் இந்த குட்கா பொருட்கள் கடத்தி வரப்பட்டு, ஸ்ரீகிருஷ்ணா கல்லூரிக்கு பின்புறம் உள்ள வடக்குத் தோட்டம் பகுதியில் சேமித்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து, அந்த கிடங்கிற்குச் சென்ற போலீஸாா், அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த மேலும் 230 கிலோ குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனா். இந்த சோதனையில் மொத்தம் 240 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களும், கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள வடமாநில கும்பல் தலைவனைப் பிடிக்க போலீஸாா் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







