கரும்பு நடும் விவசாயிகளுக்கு விதி தளர்வு, ஏற்கெனவே சொட்டுநீர்ப் பாசனம் இருந்தாலும் கரும்பு நாற்று நடுவதற்கு மானியம் கிடைக்கும் என கோபி வேளாண்மை உதவி இயக்குநர் தகவல் தெரிவித்துள்ளார்.
கரும்பு சாகுபடியில் விதைக் கரணைகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக கரும்பு நாற்றுகளை நடவு செய்யும் முறையில் மகசூல் இருமடங்கு வரை அதிகரிக்கிறது. எனவே, இந்தப் புதிய முறைக்கு மாறும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதத்தில் வேளாண் துறையில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் அதிக விவசாயிகள் பயன்பெறும் விதத்தில் மேலும் கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து, கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி தெரிவித்துள்ளதாவது:
செம்மை கரும்பு சாகுபடி எனும் ஒரு விதைப் பருவ சீவல் மூலம் நாற்று உற்பத்தி செய்து நடவு செய்யும்போது ஏராளமான பக்கக் கிளைகள் தோன்றி கரும்பு எடையும் அதிகரிப்பதால் ஏக்கருக்கு 100 டன்கள் வரை மகசூல் கிடைக்கிறது. தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இந்தப் புதிய முறையில் புதியதாக சொட்டுநீர்ப் பாசனம் அமைத்து அந்த வயலில் நடப்படும் கரும்பு நாற்றுகளுக்கு மட்டும் முன்பு மானியம் வழங்கப்பட்டது.
தற்போது இந்த விதிகளைத் தளர்வு செய்து ஏற்கெனவே ஒரு விவசாயி சொந்தமாகவோ அரசு மானியம் மூலமாகவோ சொட்டு நீர்ப்பாசனம் அமைத்திருந்தாலும், அவர் நடப்பு ஆண்டில் கரும்பு நாற்று நடவு செய்தால் ஏக்கருக்கு ரூ. 4,500 மானியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, அனைத்து கரும்பு சாகுபடி விவசாயிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்திட்டத்துக்கு கோபி வட்டாரத்துக்கு மட்டும் 125 ஏக்கருக்கு ரூ. 5.62 லட்சம் மானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், விவரங்களுக்கு கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாம் எனத் தெரிவித்துள்ளார்.