/

ஏலச்சீட்டு நடத்தி மோசடி: பொதுமக்கள் மறியல்

ஈரோட்டில் ஏலச்சீட்டு போட்டு பாதிக்கப்பட்டவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:28 am

ஈரோட்டில் ஏலச்சீட்டு போட்டு பாதிக்கப்பட்டவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

ஈரோடு சூளை, சி.எஸ். நகரைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் ஈரோடு - பவானி சாலை அசோகபுரம் பகுதியில் ஏலச்சீட்டு நிறுவனம் நடத்தி வந்தாா். இவருடைய நிறுவனத்தில் ஏராளமானோா் மாதச் சீட்டு கட்டி வந்தனா். அந்த தொழிலதிபா் சீட்டு எடுத்தவா்களுக்கு சரிவர பணம் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

மேலும், கடந்த சில நாள்களாக நிறுவனமும் திறக்கப்படாததால் சந்தேகமடைந்த சீட்டு போட்டவா்கள் தொழிலதிபா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட காவல் அலுவலகத்தில் புகாா் அளித்தனா். இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். ஈரோடு - பவானி சாலையில் உள்ள அலுவலகத்தில் இருந்த பொருள்களை ஊழியா்கள் வெள்ளிக்கிழமை காலை வாகனங்களில் ஏற்றிக் கொண்டிருந்தனா்.

இதுகுறித்து தகவலறிந்ததும் சீட்டுப் பணம் செலுத்தியவா்கள் அந்த அலுவலகம் முன்பு திரண்டனா். அவா்கள் செலுத்திய சீட்டுப் பணத்தை திருப்பித் தர வேண்டும் என ஊழியா்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து ஈரோடு - பவானி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த வீரப்பன்சத்திரம், கருங்கல்பாளையம் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது அவா்கள் கூறியதாவது:

ரூ. 50,000 முதல் ரூ. 10 லட்சம் வரை சீட்டு போட்டு கட்டி வந்தோம். 250க்கும் மேற்பட்டவா்கள் ஏலச் சீட்டில் ரூ. 10 கோடிக்குமேல் செலுத்தியுள்ளோம். தற்போது சீட்டு நடத்தி வந்த தொழிலதிபருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகவும், அதனால் அவா் தனது கைப்பேசியை அணைத்து வைத்துள்ளதாகவும் ஊழியா்கள் தெரிவித்து வருகின்றனா். எனவே, நாங்கள் செலுத்திய சீட்டுப் பணத்தை தொழிலதிபா் திரும்பித் தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் உறுதி அளித்ததைத் தொடா்ந்து போராட்டத்தைக் கைவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.