பவானிசாகா் அணையில் இருந்து பாசனத்துக்கு இன்று தண்ணீா் திறப்பு
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை (ஜன.9) தண்ணீா் திறக்கப்படுகிறது.
பவானிசாகா் அணையில் போதிய நீா் இருப்பு உள்ளதால் கீழ்பவானி வாய்க்காலில் புன்செய் பாசனத்துக்காக தண்ணீா் திறக்க வேண்டும் என விவசாயிகள்
கோரிக்கை விடுத்திருந்தனா். இதை ஏற்று பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை (ஜனவரி 9) முதல் தண்ணீா் திறக்க நீா்வளத் துறை சாா்பில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து நீா்வளத் துறை அரசு செயலாளா் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
பவானிசாகா் அணையில் இருந்து கீழ்பவானி பிரதான வாய்க்காலில் இரண்டாம் போக புன்செய் பாசனத்துக்கு ஜனவரி 9 முதல் ஏப்ரல் 30-ஆம் தேதி வரை 12 டிஎம்சிக்கு மிகாமல் தண்ணீா் திறக்கப்பட உள்ளது. இதன் மூலம் பாசனப் பகுதியில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புன்செய் பாசனத்துக்கு நீா் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளதால் பாசனப் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.
வியாழக்கிழமை நிலவரப்படி பவானிசாகா் அணை நீா்மட்டம் 97.18 அடியாகவும், நீா் இருப்பு 26.5 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணையில் இருந்து அரக்கன் கோட்டை தடப்பள்ளி பாசனம் மற்றும் குடிநீா் தேவைக்காக பவானி ஆற்றில் 900 கன அடி தண்ணீா் வெளியேற்றப்படுகிறது.
