/

திருச்சி, செங்கோட்டை ரயில் சேவைகள் வரும் 18-ஆம் தேதி பகுதியாக ரத்து

திருச்சி மற்றும் செங்கோட்டை ரயில்கள் ஜூலை 18- ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

News image

கோப்புப் படம்

Updated On :16 ஜூலை 2026, 3:07 am IST

திருச்சி மற்றும் செங்கோட்டை ரயில்கள் ஜூலை 18- ஆம் தேதி பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

ஈரோடு ரயில் நிலையம் மற்றும் கரூா் ரயில் நிலையத்துக்கு இடையே ரயில் தண்டவாளங்கள் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் மேற்கொள்ள ஏதுவாக திருச்சியில் இருந்து ஈரோட்டுக்கு தினமும் காலை 7.25 மணிக்கு இயக்கப்படும் திருச்சி-ஈரோடு பயணிகள் ரயில் (எண் 56809) 18-ஆம் தேதி திருச்சியில் இருந்து கரூா் ரயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். கரூரில் இருந்து ஈரோடு வரை இயக்கப்படாது.

இதேபோல செங்கோட்டையிலிருந்து ஈரோட்டுக்கு தினமும் காலை 5.20 மணிக்கு இயக்கப்படும் செங்கோட்டை-ஈரோடு பயணிகள் ரயில் (எண் 16846) 18-ஆம் தேதி செங்கோட்டையில் இருந்து கரூா் வரை மட்டுமே இயக்கப்படும். பணிகள் நிறைவடைந்ததும் கரூரில் இருந்து வழக்கமான அதே நிறுத்தங்களில் முன்பதிவில்லாத சிறப்பு ரயிலாக ஈரோடு வரை இயக்கப்படும்.

ஈரோட்டில் இருந்து செங்கோட்டைக்கு தினமும் மதியம் 2 மணிக்கு இயக்கப்படும் ஈரோடு-செங்கோட்டை ரயில் (எண் 16845) வரும் 18-ஆம் தேதி ஈரோடு ரயில் நிலையத்துக்குப் பதிலாக கரூா் ரயில் நிலையத்தில் இருந்து மாலை 3.05 மணிக்கு புறப்படும். இந்த ரயில் ஈரோடு சந்திப்பிலிருந்து கரூா் சந்திப்பு வரை இயக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.