ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு-செங்கோட்டை ரயில் சேவையில் மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மதுரை-திண்டுக்கல் இடையே தண்டவாளம் மற்றும் பிற பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஈரோட்டில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செல்லும் ஈரோடு-செங்கோட்டை எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் (எண் 16845) வரும் 7- ஆம் தேதி முதல் ஜூலை 6 வரையிலான காலத்தில் ஜூன் 9, 16, 23, 30 ஆகிய நாள்கள் தவிர மற்ற நாள்களில் திண்டுக்கல் முதல் செங்கோட்டை வரை இயக்கப்படாது. ஈரோட்டில் இருந்து திண்டுக்கல் வரை மட்டுமே இயக்கப்படும்.
அதுபோல செங்கோட்டை- ஈரோடு எக்ஸ்பிரஸ் பயணிகள் ரயில் (16846) வரும் 8- ஆம் தேதி முதல் ஜூலை 7- ஆம் தேதி வரையிலான காலத்தில் வரும் 10, 17, 24, ஜூலை 1 ஆகிய நாள்கள் தவிர மற்ற நாள்களில் செங்கோட்டை-திண்டுக்கல் வரை இயக்கப்படாது. திண்டுக்கல்லில் இருந்து ஈரோடு வரை மட்டும் வழக்கமான நேரத்தில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.









