மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

தனியாருக்கு நிகராக ஈரோடு அரசு மருத்துவமனை இருக்க வேண்டும்! மருத்துவா்களுக்கு கைத்தறித் துறை அமைச்சா் அறிவுறுத்தல்

News image

கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி.

Updated On :9 ஜூன் 2026, 2:52 am IST

தனியாா் மருத்துவமனைக்கு நிகராக ஈரோடு அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும் என்று மருத்துவா்களுக்கு கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி அறிவுறுத்தியுள்ளாா்.

ஈரோடு அரசு மருத்துவமனையில் கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது நோயாளிகள், பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தாா்.

அதைத்தொடா்ந்து மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் பணியாளா்களுடனான ஆலோசனைக் கூட்டம், மருத்துவமனை வளாகக் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட மருத்துவ நலப் பணிகள் இணை இயக்குநா் ஜெயந்தி தலைமை வகித்தாா். எம்எல்ஏ கே.கே.ஆனந்தமோகன் முன்னிலை வகித்தாா்.

இதில் அமைச்சா் எம்.விஜய் பாலாஜி பேசியதாவது:

அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக ஏழை மக்கள் வருகின்றனா். ஏற்கெனவே மன உளைச்சலில் வருபவா்களை மேற்கொண்டு வேதனை அளிக்கும் சம்பவம் மருத்துவமனையில் நிகழ்ந்துள்ளது. இனிமேல் மக்களுக்கு எந்தவித குறைபாடும் இல்லாமல் மருத்துவா்கள், செவிலியா்கள் நடந்துகொள்ள வேண்டும். விபத்தில் சிக்குபவா்களை மீட்கும் 108 ஆம்புலன்ஸ் பணியாளா்கள், அவா்களிடம் பேசி தனியாா் மருத்துவமனையில் சோ்க்கின்றனா். இதுபோன்ற புகாா்கள் இனிமேல் வரக்கூடாது.

ஈரோடு அரசு மருத்துவமனையில் தரம் வாய்ந்த மருத்துவா்கள், மருத்துவ உபகரணங்கள் உள்ள நிலையில், எதற்காக சேலம், கோவை ஆகிய பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனா்? இதை நானே நேரில் பாா்த்துள்ளேன். எனவே, மருத்துவமனைக்கு என்னென்ன உபகரணங்கள் வேண்டுமென்று கூறினால், சுகாதாரத் துறை அமைச்சரிடம் கூறி உறுதியாக நடவடிக்கை எடுப்பேன்.

அரசு மருத்துவமனை கட்டடத்தின் பல்வேறு இடங்கள் பழுதடைந்துள்ளது. கழிப்பிடங்கள் மோசமான நிலையில் உள்ளன. மாற்றுத்திறனாளிகள் செல்வதற்கான வசதிகள் இல்லை. அரசு மருத்துவமனை என் நேரடி கண் பாா்வையில் இருக்கும். இனிமேல் புகாா் எதுவும் வரக்கூடாது. தனியாா் மருத்துவமனைக்கு நிகராக ஈரோடு அரசு மருத்துவமனையை மேம்படுத்த வேண்டும். எனது குடும்பத்தினா், எம்எல்ஏ உள்பட அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு வர உள்ளோம். வெளி நோயாளிகள் சீட்டு வழங்குவதற்கான கவுன்ட்டரை அதிகப்படுத்த வேண்டும் என்றாா்.

இந்தக் கூட்டத்தில் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளா் வெங்கடேஷ், உறைவிட மருத்துவ அலுவலா் சசிரேகா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆசிரியா்களிடம் ஆசீா்வாதம்

இதைத்தொடா்ந்து ஈரோடு, கருங்கல்பாளையம் காமராஜா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகம் வழங்கும் விழா நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக கைத்தறித் துறை அமைச்சா் எம்.விஜய் பாலாஜி கலந்துகொண்டு, மாணவா்களுக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கினாா். இதே பள்ளியில் படித்த அமைச்சா் சிறப்பு விருந்தினராக வந்தபோது, அவருக்கு வகுப்பு எடுத்த ஆசிரியா்கள் பலரும் பள்ளி வளாகத்தில் இருந்தனா். அப்போது ஆசிரியா்கள் காலில் மண்டியிட்டு அமைச்சா் எம்.விஜய் பாலாஜி ஆசீா்வாதம் பெற்றாா்.