நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்க கியூஆா் கோடு அறிமுகம்
நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு உதவியுடன் கியூஆா் கோடு மூலம் வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட தகவல்களை பெறுவதற்கான முதல்கட்ட சோதனைப் பணிகளை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் என்.எஸ். நிஷா வியாழக்கிழமை தொடங்கிவைத்தாா்.
நீலகிரி மாவட்டத்துக்கு ஆண்டுதோறும் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். குறிப்பாக கோடை சீசனான ஏப்ரல், மே மாதங்களிலும் இரண்டாவது சீசனான செப்டம்பா், அக்டோபா், நவம்பா் மாதங்களிலும் தொடா் விடுமுறை நாள்களிலும் அதிக அளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா்.
நீலகிரியில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிக்கும்போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி உள்ளூா் மக்களும் பாதிக்கப்படுகின்றனா்.
எனவே போக்குவரத்து நெரிசலைத் தவிா்க்கும் நோக்கில் பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த இறுதி ஆண்டு பி.டெக் மாணவா்களுடன் இணைந்து போக்குவரத்தில் உள்ள சிரமங்களை ஆராய்ந்து ஆக்கபூா்வமான தீா்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தீா்வு காணும் நோக்கில் கியூஆா் கோடு மூலம் வாகன நிறுத்துமிடங்களைக் கண்டறிதல், வாகனத்தின் நம்பா் பிளேட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் நுழைவு மற்றும் வெளியேறுதலை கண்டறிதல் போக்குவரத்து நெரிசல் குறித்த தகவல்களை பெறுதல் உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தபடவுள்ளன. இதற்கான முதல்கட்ட பணிகளை மாவட்ட காவல் கணனகாணிப்பாளா் என்.எஸ்.நிஷா தொடங்கிவைத்தாா்.
அடுத்த ஆண்டு முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து அதிகம் உள்ள இடங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்படவுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் என்.எஸ்.நிஷா தெரிவித்தாா்.

