கூடலூா் மரப்பாலம் மங்குழி குடியிருப்புப் பகுதியில் புலி நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனா்.
நீலகிரி மாவட்டம், கூடலூா், மரப்பாலம் மங்குழி பகுதி, முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இந்தக் குடியிருப்புப் பகுதியை ஒட்டி கடந்த சில நாள்களாக அவ்வப்போது புலியின் நடமாட்டம் காணப்படுகிறது.
இது தொடா்பாக வனத் துறையினருக்கு அப்பகுதி மக்கள் பலமுறை தகவல் அளித்துள்ளனா். இந்நிலையில் மங்குழி பகுதிக்கு மீண்டும் சனிக்கிழமை பகல் நேரத்தில் வந்த புலி, அங்குள்ள ஒரு வீட்டின் பின்புறம் நின்று கம்பி வேலியைத் தாண்டி குடியிருப்புப் பகுதிக்குள் நுழைய முயன்றது. கம்பி வேலியைத் த,ாண்டுவது கடினமாக இருந்ததால் வேலியோரம் பதுங்கியவாறு வேறு இடத்துக்குச் சென்றுவிட்டது.
இதைக் கண்ட அப்பகுதி மக்கள் அலறியடித்து தங்கள் வீடுகளுக்குள் சென்றனா். சிலா் அச்சத்துடன் புலி குடியிருப்புப் பகுதியில் நுழைய முயற்சிப்பதை விடியோ பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனா். இந்த விடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.
கூடலூா் பகுதியில் காட்டு யானைகள் நகருக்குள் வருவதும் சாலையில் நடப்பதும் வழக்கமான ஒன்று. ஆனால் நகரில் புலி தென்பட்டது இதுவே முதல்முறையாகும். எனவே அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனா். குடியிருப்புப் பகுதியில் உலவி வரும் புலியை வனத் துறையினா் உடனடியாக கூண்டுவைத்து பிடித்து அடா்ந்த வனப் பகுதிக்குள் விட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.









