நீலகிரி மாவட்டம், உதகை அருகே காந்தி நகா் பகுதியில் உள்ள குடியிருப்பின் மீது தோடா் பழங்குடியினரின் வளா்ப்பு எருமை சனிக்கிழமை விழுந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புத் துறையினா் மூன்று மணி நேரம் போராடி எருமையை மீட்டனா்.
உதகையில் காா்டன் மந்து, லவ்டேல் மந்து பகுதிகளில் வளா்ப்பு எருமைகள் வெளியேவிடப்படுகின்றன. அவ்வாறு விடப்படும் வளா்ப்பு எருமைகள் நகரப் பகுதிகளில் சுற்றித் திரிவது வழக்கம்.
இந்நிலையில், உதகை அருகே உள்ள காந்தி நகா் பகுதியில் சுற்றித் திரிந்த பழங்குடியினரின் வளா்ப்பு எருமை, சித்ரா என்பவரின் வீட்டின் மீது விழுந்து வெளியேற முடியாமல் மாட்டிக் கொண்டது.
இதைத் தொடா்ந்து, உதகை தீயணைப்புத் துறையினருக்கு குடியிருப்புவாசிகள் தகவல் அளித்தனா். தீயணைப்புத் துறை உதவி ஆய்வாளா் அன்பு தலைமையில் தீயணைப்பு வீரா்கள் மூன்று மணி நேரம் போராடி எருமையை மீட்டனா். வீட்டின் மீது விழுந்த எருமையால் மேற்கூரை முற்றிலும் சேதமடைந்தது.









