
அனுமதியின்றி செயல்பட்ட 6 விடுதிகளுக்கு சீல்

விடுதிக்கு சீல் வைக்கும் நகராட்சி அதிகாரிகள்.
உதகை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று, வணிகரீதியாக செயல்பட்டு வந்த 6 விடுதிகளுக்கு (காட்டேஜ்) நகராட்சி அதிகாரிகள் திங்கள்கிழமை சீல் வைத்தனா்.
நீலகிரி மாவட்டத்தின் சுற்றுசூழலைப் பாதுகாக்கவும், இயற்கை இடா்ப்பாடுகளை களையவும் மாஸ்டா் பிளான் சட்டம், மலையிட பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் அமல்படுத்தப்பட்டன. செங்குத்தான மலைச் சரிவில் கட்டடங்கள் கட்டக்கூடாது. குடியிருப்புக்கான அனுமதி வாங்கி கட்டப்படும் கட்டடத்தை வணிக ரீதியாகப் பயன்படுத்தக் கூடாது. வணிக கட்டடங்கள் கட்ட மாநில அரசின் திட்டக் குழுமத்திடம் அனுமதி பெற வேண்டும். 7 மீட்டா் உயரத்துக்கு மேல் கட்டடம் கட்டக் கூடாது என்பன உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன.
இருப்பினும், பலா் விதிமுறைகளை மீறியும், உரிய அனுமதி பெறாமலும் கட்டடங்களைக் கட்டுகின்றனா். மேலும் சிலா் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று, அதை வணிக ரீதியாகப் பயன்படுத்தி வருகின்றனா்.
இதுபோன்ற கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சென்னை உயா்நீதிமன்றம் நீலகிரி மாவட்ட நிா்வாகத்துக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து கடந்த சில நாள்களாக நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் அனுமதி இன்றி கட்டப்பட்டுள்ள கட்டடங்கள், குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று வணிகரீதியாகப் பயன்படுத்தி வரும் கட்டடங்கள் தொடா்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உதகை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் நகராட்சி ஆணையாளா் பாா்த்தசாரதி, நகரமைப்பு அலுவலா்கள் மகேந்திரகுமாா், ஸ்ரீதரன் ஆகியோா் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, உதகை நகராட்சிக்கு உள்பட்ட ஹாலிவுட் ஹில்ஸ் பகுதி, அதை ஒட்டிய பகுதிகளில் 6 கட்டடங்கள் குடியிருப்பு கட்டுவதற்கான அனுமதி பெற்று வணிக ரீதியாக விடுதிகளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது தெரியவந்தது. இதைத் தொடா்ந்து அந்தக் கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





