திருப்பூர் மாவட்டத்தில் ஜாக்டோ-ஜியோ அமைப்பு நடத்திய வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 8 ஆயிரம் பேர் செவ்வாய்க்கிழமை பங்கேற்றதால் அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு அமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் திருப்பூர் மாநகர வடக்கு ஒன்றியம் சார்பில் ரயில் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு முதுகலை ஆசிரியர் சங்க மாவட்டப் பொருளாளர் பிரகாஷ் தலைமை வகித்தார்.
இதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி., வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கு மாறாக தொடக்கப் பள்ளி ஆசிரியர்களை பணிமாற்றம் செய்வதை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பல்வேறு சங்க நிர்வாகிகள் என 400க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திருப்பூர் தெற்கு ஒன்றியம் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ- ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்களான காளீஸ்வரி, மரிய பிரகாஷ், பாஸ்கரன், பாக்கியம் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் ஜாக்டே-ஜியோ சார்பில் தொடங்கப்பட்ட வேலைநிறுத்தப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை சுமார் 8 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர். இதனால் மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகள், அரசு அலுவலகங்களில் அன்றாடப் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. புதன்கிழமை சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்றனர்.
மாநகரில் 50 சதவீதப் பள்ளிகள் மூடல்: இந்தப் போராட்டம் காரணமாக திருப்பூர் மாநகர தெற்கு ஒன்றியத்தில் 92 ஆரம்பப் பள்ளி, நடுநிலைப்பள்ளிகள், திருப்பூர் மாநகர வடக்கு ஒன்றியத்தில் 92 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இதில், வடக்கு ஒன்றியத்தில் 45 பள்ளிகளும், தெற்கு ஒன்றியத்தில் 50 பள்ளிகளும் திறக்கப்படவில்லை. மேலும், ஒரு சில பள்ளிகளில் மிகவும் குறைந்த அளவு ஆசிரியர்களே பணிக்கு வந்திருந்தனர். குமார் நகர், அங்கேரிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பெரும்பலான ஆரம்பப் பள்ளிகள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாகத் திறக்கப்படவில்லை.
வெறிச்சோடிய வட்டாட்சியர் அலுவலகங்கள்: இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக மாவட்டத்தில் உள்ள திருப்பூர் வடக்கு, திருப்பூர் தெற்கு, பல்லடம், அவிநாசி, ஊத்துக்குளி, மடத்துக்குளம், உடுமலை, காங்கயம், தாராபுரம் ஆகிய 9 வட்டாட்சியர் அலுவலகங்களில் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடிக் கணப்பட்டன. இதனால், சான்றிதழ்கள் கோரி வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.
உடுமலையில்...
ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் உடுமலையில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடுமலை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் ஆ.தங்கவேல் தலைமை வகித்தார். உயர்மட்டக் குழு உறு ப்பினர் மா.பாலசுப்பிரமணியம் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இதில், 20க்கும் மேற்பட்ட அமைப்புக்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேல்பூரி 17-05-2026

அமைச்சர்கள் நியமிக்கப்படாத துறைகள்!

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay

கொல்கத்தா நைட் ரைடர்ஸுக்கு எதிராக குஜராத் டைட்டன்ஸ் பந்துவீச்சு!
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை
