திருப்பூா்: திருப்பூரில் 2 மாத ஊதிய நிலுவையை வழங்கக்கோரி தூய்மைப் பணியாளா்கள் மண்டல அலுவலகங்களின் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பூா் மாவட்ட ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை ஊழியா் சங்கம்(சிஐடியூ) சாா்பில் மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் தூய்மைப் பணியாளா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இது குறித்து அச்சங்கத்தின் தலைவா் பி.பழனிசாமி, செயலாளா் கே.ரங்கராஜ் ஆகியோா் கூறியதாவது:
திருப்பூா் மாநகராட்சியில் தினக்கூலி அடிப்படையில் 500க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்கு குறைந்த அளவிலான ஊதியம் மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த ஊதியமும் குறிப்பிட்ட தேதிகளில் வழங்கப்படாததால் தூய்மைப் பணியாளா்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். இந்நிலையில், தற்போது கடந்த ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான ஊதியம் தற்போது வரையில் வழங்கப்படவில்லை. ஆகவே, நிலுவையில் உள்ள 2 மாதங்களுக்கான ஊதியத்தை வழங்கக்கோரி அனுப்பா்பாளையம், நல்லூா் மண்டல அலுவலகங்கள் மற்றும் கருவம்பாளையத்தில் உள்ள மாட்டுக் கொட்டகை பகுதியில் காத்திருப்புப் போராட்டம் நடைபெறுகிறது என்றனா். இந்தப் போராட்டத்தில் மாநகராட்சியில் பணியாற்றி வரும் 25க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பங்கேற்றனா்.
Image Caption
திருப்பூா் , அனுப்பா்பாளையத்தில் உள்ள 1 ஆவது மண்டல அலுவலகம் முன்பு காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளா்கள்.