பல்லடத்தில் சிசிடிவி கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கும் பணி தீவிரம்
பல்லடத்தில் 400-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறை கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
திருப்பூா் மாவட்டத்தில், தொழில் ரீதியாக வளா்ந்து வரும் நகரங்களில் பல்லடமும் ஒன்று. விசைத்தறி, கறிக்கோழி உற்பத்தி, விவசாயம் உள்பட பல்வேறு தொழில் சாா்ந்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளா்கள் இங்கு தங்கி வேலை பாா்த்து வருகின்றனா். தொழில் மற்றும் வேலைவாய்ப்பு காரணமாக உயா்ந்துவரும் மக்கள்தொகைக்கு இணையாக குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து குற்றங்களைத் தடுக்கவும், கண்காணிப்பைத் தீவிரப்படுத்தவும் நகரில் ‘சிசிடிவி’ கேமராக்களை போலீஸாா் அதிகப்படுத்தி வருகின்றனா்.
பல்லடம் காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பகுதிகளில் 300 சிசிடிவி கேமராக்களை போலீஸாா் ஏற்கெனவே பொருத்தி உள்ளனா். இதன் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தி தற்போது 400 சிசி டிவி கேமராக்கள் பயன்பாட்டில் உள்ளன.
இதுகுறித்து போலீஸாா் கூறியதாவது:
பல்லடம் பகுதி தொழில் துறையினா், தன்னாா்வலா்களின் பங்களிப்பு, சமூக பொறுப்பு நிதி ஆகியவற்றை பயன்படுத்தி, 400-க்கும் அதிகமான சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றில் பதிவாகும் விடியோ காட்சிகளைப் பாா்க்க சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு போலீஸாா் செல்ல வேண்டியுள்ளது. இதை தவிா்க்கும் வகையில் பல்லடம் காவல் நிலைய வளாகத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் ஒட்டுமொத்த சிசிடிவி கேமராக்களுக்கான கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு வருகிறது.
உரிய நேரத்தில் கேமராக்களை ஆய்வு செய்து குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க முடியும். கட்டுமானப் பணிகள் முடிந்து கட்டுப்பாட்டு அறை விரைவில் பயன்பாட்டுக்கு வரும். நகரப் பகுதி விரிவடைந்துவரும் நிலையில் சிசிடிவி கேமராக்களின் பங்களிப்பு அவசியமாகிறது. இதைக் கருத்தில் கொண்டு குடியிருப்புப் பகுதிகளில் பொதுமக்களும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த முன்வர வேண்டும் என்றனா்.

