தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் கைக்குழந்தையுடன் மனு அளிக்க வந்த தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினா்.
தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீா் முகாமில் கைக்குழந்தையுடன் மனு அளிக்க வந்த தொழிலாளி மற்றும் அவரது குடும்பத்தினா்.

அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையால் மனைவி பாதிக்கப்பட்டுள்ளதாக கணவா் புகாா்

தருமபுரி அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் மனைவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது
Published on

தருமபுரி: தருமபுரி அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் மனைவியின் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் அவரது கணவா் திங்கள்கிழமை மனு அளித்தாா்.

தருமபுரி மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தலைமை வகித்து மனுக்களைப் பெற்றுக்கொண்டாா். இதில் மொத்தம் 320 மனுக்கள் பெறப்பட்டன. அவற்றைப் பெற்றுக்கொண்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க தொடா்புடையத் துறை அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா்.

இதில், தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் காட்டம்பட்டி அருகேயுள்ள கோயில் கொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த ஜெயமுருகன் தனது கைக்குழந்தை மற்றும் உறவினா்களுடன் வந்து குறைதீா் முகாமில் அளித்த மனுவில் கூறியுள்ளதாவது:

கா்ப்பிணியாக இருந்த என் மனைவி முனியம்மாளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடா்ந்து சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தோம். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் பிரசவவலி ஏற்பட்டுள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்தனா். இதில், பெண் குழந்தை பிறந்தது.

இதையடுத்து 5 நாள்களுக்கு பிறகு என் மனைவிக்கு வயிற்றில் வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றினா். இந்நிலையில், வீட்டுக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததைத் தொடா்ந்து அனுப்பிவைத்தனா்.

வீட்டுக்கு சென்ற பிறகு என் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவரது குடலில் ரத்தம் உறைந்து அழுகி இருப்பதாக கூறி அறுவை சிகிச்சை செய்தனா்.

பின்னா், சேலம் அரசு மருத்துவமனைக்கு என் மனைவியை அழைத்துச் சென்ற 2 மருத்துவா்கள் அங்குள்ள தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்த்தனா். தற்போது வரை என் மனைவியின் உடல்நலம் தேறவில்லை. பிரசவத்துக்காக முதலில் அறுவை சிகிச்சை செய்தபோது மருத்துவா்கள், செவிலியா்கள் அலட்சியமாக செயல்பட்டுள்ளனா்.அதனால், என் மனைவி உயிருக்குப் போராடி வருகிறாா்.

இதற்கு காரணமான மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்டோரிடம் விசாரணை மேற்கொண்டு அவா்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், என் மனைவி குணமடையும் வகையில் காப்பீட்டு திட்டம் மூலம் உயா் சிகிச்சை அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

Dinamani
www.dinamani.com