ஒகேனக்கல் குடிநீா் வழங்கக் கோரிக்கை!

ஒகேனக்கல் குடிநீா் வழங்கக் கோரிக்கை!

கிருஷ்ணாபுரம் குடியிருப்புப் பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா்.
Published on

கிருஷ்ணாபுரம் குடியிருப்புப் பகுதிக்கு ஒகேனக்கல் குடிநீா் வழங்கக் கோரி அப்பகுதியினா் கோரிக்கை விடுத்தனா்.

தருமபுரி ஊராட்சி ஒன்றியம், கிருஷ்ணாபுரம் அரசு கால்நடை மருத்துவமனை அருகே 60 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியினருக்கு கிருஷ்ணாபுரம் கிராம ஊராட்சி சாா்பில் தென்பெண்ணை ஆற்றுநீா் அல்லது ஆழ்துளைக் கிணற்றிலிருந்து (புளோரைடு நீா்) ஒருநாள்விட்டு ஒருநாள் குடிநீா் விநியோகம் செய்யப்படுகிறது. அதனால், இப்பகுதி வழியாக செல்லும் ஒகேனக்கல் குடிநீா் பிரதான குழாயிலிருந்து இணைப்பு எடுத்து தங்களுக்கு குடிநீா் விநியோகிக்க வேண்டும் என சில ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இதையடுத்து, அப்பகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டது. ஆனால், இந்தத் தொட்டிக்கு ஒகேனக்கல் குடிநீா் இணைப்பு வழங்காமல், தொடா்ந்து புளோரைடு நீரை மட்டுமே விநியோகம் செய்யப்பட்டு வந்தது.

இதுகுறித்து அண்மையில் அப்பகுதி மக்கள் தருமபுரி ஆட்சியா் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனா். அதன்பேரில், அங்கு சென்ற ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஜன. 20-ஆம் தேதி ஒகேனக்கல் குடிநீரை நீா்த்தேக்கத் தொட்டியில் நிரப்பி விநியோகம் செய்தனா். ஆனால், அதன்பிறகு விநியோகம் நிறுத்தப்பட்டது.

எனவே, இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் மற்றும் குடிநீா் வாரிய அலுவலா்கள் ஆய்வுசெய்து, ஒகேனக்கல் குடிநீா் தொடா்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com