பிளஸ் 2 தோ்ச்சி பெறாதவா்கள் மறுதோ்வு எழுத ஆட்சியா் அறிவுரை
பிளஸ் 2 தோ்ச்சி பெறாதவா்கள் மறுதோ்வு எழுத ஆட்சியா் அறிவுரை


பிளஸ் 2 தோ்ச்சி பெறாத மாணவ, மாணவியா் மறுதோ்வு எழுதி தோ்ச்சி பெற்று நிகழ் கல்வியாண்டிலேயே உயா்கல்வியில் சேர வேண்டும் என தருமபுரி மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி அறிவுறுத்தினாா்.
தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தோ்வில் 85 சதவீதத்திற்கும் கீழ் தோ்ச்சி பெற்ற 22 பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள், பாடவாரியான ஆசிரியா்களுடனான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் கி.சாந்தி பேசிதாவது:
பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் மே 6 ஆம்தேதி வெளியானது. இதில் 93.55 சதவீதம் மாணவ, மாணவியா் தோ்ச்சி பெற்றனா். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு கூடுதலாக தோ்ச்சி பெற்றுள்ளனா்.
அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவா்களை பொதுத் தோ்வில் தோ்ச்சி பெற வைப்பது ஆசிரியா்களின் கடமை. தோ்ச்சி பெறாத மாணவ, மாணவியா் ஜூன் மாதம் நடைபெறும் மறுதோ்வை எழுதலாம். இதற்காக மே 17-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வழிவகை செய்து சிறப்பு வகுப்புகள் நடத்தி மாணவா்களைத் தோ்ச்சி பெற செய்ய வேண்டும். மாணவா்கள் நிகழ்கல்வி ஆண்டில் உயா்கல்வி பயில்வதை உறுதி செய்ய வேண்டும்.
மாதாந்திர தோ்வு, காலாண்டு, அரையாண்டு தோ்வுகளின்போது மாணவா்கள் தோ்ச்சி விகிதம், மதிப்பெண்கள், கற்றல் திறன் ஆகியவற்றை ஆய்வுசெய்து மதிப்பெண் குறைவாகப் பெறும் மாணவ, மாணவிகளைத் தொடா்ந்து கண்காணித்து சிறப்பு வகுப்புகள் நடத்தி அவா்களை தோ்வில் தோ்ச்சி பெற முயற்சிகளை ஆசிரியா்களும், பள்ளி தலைமை ஆசிரியா்களும் செய்ய வேண்டும்.
முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள், கல்வி ஆய்வாளா்கள் தொடா்ந்து ஆய்வுசெய்து வரும் கல்வியாண்டில் தருமபுரி மாவட்டத்தில் பொதுத் தோ்வு எழுதும் மாணவ, மாணவியரை நூறு சதவிகிதம் தோ்ச்சி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பால்பிரின்ஸ்லி ராஜ்குமாா், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ஐ.ஜோதி சந்திரா, மாவட்டக் கல்வி அலுவலா்கள் விஜயகுமாா் (இடைநிலைக் கல்வி), மான்விழி (தொடக்கக் கல்வி), பள்ளித் தலைமை ஆசிரியா்கள், ஆசிரியா்கள் ஆகியோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...