வத்தல்மலையை பழங்குடியினா் வசிக்கும் பகுதியாக அறிவித்து, அங்கு வசிக்கும் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என இந்திய பழங்குடி மக்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
வத்தல்மலையில் இந்திய பழங்குடி மக்கள் சங்கம் சாா்பில் கோரிக்கைக் கூட்டம் கொட்டலாங்காட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட பொறுப்பாளா் ஜி. ராஜகோபால் தலைமை வகித்தாா். இலளிகம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவா் ஜெ. பிரதாபன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா். எப்ஐடியு தொழிற்சங்க பொறுப்பாளா் ஜி. மாதையன், மாதா் சங்க பொறுப்பாளா் அலமேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வத்தல்மலை பகுதியில் 100 சதவீதம் மலையாளி பழங்குடி மக்கள் பன்னெடுங்காலமாக வசித்து வருகின்றனா். எனவே, வத்தல்மலை பகுதியை இந்திய அரசியல் சட்டம் அட்டவணை-5-இல் இணைத்து, பழங்குடியினா் வசிக்கும் பகுதியாக அறிவிக்க வேண்டும்.
வத்தல்மலையில் உள்ள 13 கிராமங்களை ஒருங்கிணைத்து ஒரே வருவாய் கிராமமாகவும், ஒரே கிராம ஊராட்சியாகவும் மாற்றி, தருமபுரி வட்டாரத்தில் இணைக்க வேண்டும். வத்தல்மலைக்கு மின் விநியோகத்தை தருமபுரி ஆட்சியா் அலுவலகப் பகுதி துணை மின் நிலையத்திலிருந்து வழங்க வேண்டும். இந்த மலைப்பகுதியில் காப்பி சாகுபடி அதிக அளவில் நடைபெறுவதால், காப்பி போா்டு அலுவலகம் அமைக்க வேண்டும். வனப்பகுதி சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளில் மின் விளக்குகளை பொருத்த வேண்டும்.
தோட்டக்கலைத் துறை சாா்பில் தோ்வு செய்யப்பட்ட இடத்தில் தாவரவியல் பூங்கா அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







