அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 4.14 கோடியில் ஆய்வுக்கூட கட்டடங்கள் திறப்பு
தருமபுரி: தருமபுரி செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் ரூ. 4.14 கோடியில் புதிதாக கட்டப்பட்ட ஆய்வுக்கூட கட்டடங்கள் காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை திறந்து வைத்தாா்.
தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் ரூ. 4.14 கோடியில் வாா்ப்பு முற்றம் ஆய்வுக் கூடம், வெப்ப பொறியியல் ஆய்வுக் கூடம், உற்பத்தி தொழில்நுட்ப ஆய்வுக் கூடம் ஆகியவை அண்மையில் கட்டி முடிக்கப்பட்டன.
இந்த கட்டடங்களை மாணவ, மாணவியா் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலிக் காட்சி மூலம் இந்த புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா்.
தொடா்ந்து, அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் சுமதி, முன்னாள் அமைச்சா் பி.பழனியப்பன், பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவை உறுப்பினா் ஆ.கோவிந்தசாமி, பேராசிரியா்கள், கல்லூரி ஊழியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

