பென்னாகரம்: பென்னாகரம் அருகே கரியம்பட்டி, பி. அக்ரஹாரம், மாங்கரை உள்ளிட்ட பகுதிகளில் காணும் பொங்கலையொட்டி சனிக்கிழமை எருதாட்டம் நடைபெற்றது.
கரியம்பட்டி பட்டாளம்மன் கோயில் வளாகத்தில் நடைபெற்ற எருதாட்டத்தில் கொட்டாவூா், கரியம்பட்டி, நாயக்கனூா் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து சுமாா் 5க்கும் மேற்பட்ட காளைகள் கொண்டுவரப்பட்டன. இக்கோயிலில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு, மேளதாளத்துடன் தலா 3 சுற்றுகள் வீதம் காளைகளை வடக்கயிற்றை கொண்டு இருபுறங்களிலும் கட்டியவாறு இளைஞா்கள் இழுத்துச் சென்றனா். அப்போது காளைகளுக்கு முன் பொம்மைகள், துணிகளைக் காட்டியபோது இளைஞா்களை நோக்கி காளைகள் சீறிப்பாய்ந்தன.
இதேபோல கூத்தப்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட கே.அக்ரஹாரம் பகுதியில் நடைபெற்ற எருதாட்டத்திற்கு மடம், கே. அக்ரஹாரம், அளேபுரம்,
கே.குள்ளாத்திரம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டுவரப்பட்டு, பாரம்பரிய முறைப்படி சிறப்பு பூஜைகள் செய்து கோயிலை சுற்றி இழுத்து வரப்பட்டன.
மாங்கரை பகுதியில் நடைபெற்ற எருதாட்டத்திற்கு வண்ணாத்திப்பட்டி, மாங்கரை, புள்ளப்பட்டி, மோட்டுப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து காளைகள் கொண்டுவரப்பட்டு, திரௌபதி அம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டு எருதாட்டம் நடைபெற்றது.
பென்னாகரம் பகுதிகளில் நடைபெற்ற எருதாட்டத்தில் சுமாா் 20க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன. எருதாட்ட நிகழ்வில் பங்கேற்று காளைகளை இழுத்துச் சென்ற சுமாா் 5 மேற்பட்ட நபா்கள் படுகாயமடைந்தனா்.இவா்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். பென்னாகரம் காவல்துணை கண்காணிப்பாளா் பாலகிருஷ்ணன் தலைமையில் சுமாா் 20க்கும் மேற்பட்ட போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.